கனடாவில் ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது தொடர்பாக திங்கள்கிழமையன்று, கனடாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக ​​உயர் பதவியில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற்றியுள்ளது கனடா அரசாங்கம். கனடா அமைச்சரவையில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கனடா உளவு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன என தெரிவித்துள்ளார். நிஜ்ஜார் ஒரு சுதந்திரமான சீக்கிய தாயகத்திற்கான வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். மேலும் அவர் ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள சீக்கிய கலாச்சார மையத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் தொடர்பாக கனடா அமைச்சரவையில் இந்த கொலைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தொடர்பு இருக்கும் என கனடா பிரதமர் குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ட்ரூடோ தனது உரையின் போது, ​​G20 உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பாக பேசப்பட்டது என குறிப்பிட்டார். இந்திய அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும், தற்போது நடைபெறும் விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கூறியதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். 


கனடாவில் 7,70,000 க்கும் அதிகமான சீக்கிய மக்கள் உள்ளனர் அதாவது மொத்த மக்கள் தொகையில் சுமார் 2% ஆகும். கடந்த சில வாரங்களாக கனடா பாதுகாப்பு முகமைகள், இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கும் கனடா குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும் இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன,” என்று பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். 






இந்நிலையில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய அரசாங்கத்தின் அபத்தமான குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. இது தொடர்பான அறிக்கையில், "கனடா பிரதமரின் அறிக்கையையும், அவர்களின் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம். கனடாவில் எந்தவொரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. 


கனடா கூறும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு  தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுக்கும் வகையிலும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் நடத்தும் பயங்கரவாத செயல்களை திசை திருப்பவுமே உதவும். 


கனடா அரசியல் பிரமுகர்கள் இத்தகைய கூறுகளுக்கு வெளிப்படையாக அனுதாபத்தை வெளிப்படுத்தியிருப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது. கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பது புதிதல்ல. கனடாவில் இருந்து செயல்படும் அனைத்து இந்திய-விரோதக் கூறுகளுக்கும் எதிராக விரைவான மற்றும் பயனுள்ள சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.