புவனேஸ்வர்: ஒடிசாவின் கட்டாக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பெற்ற ஒருவரை சமூக சேவகர் ஒருவர் கட்டாயப்படுத்தி நடனமாட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


71 வயதான கமலா பூஜாரி, சிறுநீரகக் கோளாறு காரணமாக ஒடிசாவில் உள்ள கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரியை டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பாக சமூக சேவகர் மம்தா பெஹரா கட்டாயப்படுத்தி நடனமாட வைத்துள்ளார். கமலா பூஜாரியுடன் சமூக சேவகரும் சேர்ந்து நடனமாடியதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மிகப்பெரிய சர்ச்சை ஆனது. மேலும், கட்டாயப்படுத்தி நடனமாட வைத்த சமூக சேவகர் மம்தா பெஹரா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பராஜா பழங்குடியினர் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கமலா பூஜாரி, ”நான் அத்தகைய நிலைமையில் ஒருபோதும் நடனமாட விரும்பவில்லை. ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பலமுறை என்னால் முடியாது மறுத்தேன்.  ஆனால்பெஹெரா கேட்கவில்லை. நடனமாடியதால் நான் மீண்டும் உடல்நிலை முடியாமல் சோர்வடைந்தேன்” என்று தெரிவித்தார். 


சமூக சேவகர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்கள் அனைவரும்  தெருவில் இறங்கிப் போராடுவோம் என்று பழங்குடியினர் சமூகத்தின் சங்கமான ‘பரஜா சமாஜா’ தலைவர் ஹரிஷ் முதுலி கூறினார்.


கமலா பூஜாரி : 




இயற்கை விவசாயத்தை ஊக்குவித்ததற்காகவும், நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் 100 க்கும் மேற்பட்ட நாட்டு விதைகளை பாதுகாத்ததற்காகவும் 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை கமலா பூஜாரி பெற்றார். சிறுநீரக பிரச்சனையால் கட்டாக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவர் விரைவில் குணமடைய முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கடந்த திங்கட்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.