மோசமான இதய நோயால் பாதிக்கப்பட்ட 67 வயது பெண், அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் 26 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ வசதிக்காக ஒருவரை விமானம் மூலம் அதிக தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது  இதுவே முதல்முறை.


அழைத்து செல்லப்பட்ட அப்பெண்ணை அடையாளம் காண முடியவில்லை. ஆனால், அவர் அந்த நாட்டில் உள்ள போர்ட்லேண்டில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்துள்ளது.


இருப்பினும், ஓரிகானில் தங்கியிருந்த அவரது குடும்பத்தினர், இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வர முடிவு செய்தனர். விமான பயணத்திற்காக பெண்ணின் குடும்பம் $133,000 (ரூ. 1 கோடிக்கு சற்று மேலாக) செலவு செய்துள்ளது. பெங்களூருவை தளமாகக் கொண்ட ஐசிஏடிடி எனப்படும் ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவையை அக்குடும்பம் பயன்படுத்தி உள்ளது. அப்பெண் தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.


போர்ட்லேண்டிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கும், இஸ்தான்புல்லில் இருந்து சென்னைக்கும் இரண்டு தனித்தனி ஜெட் விமானங்களில் அந்தப் பெண் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். முதல் தனியார் ஜெட் விமானத்தில் மூன்று மருத்துவர்கள் மற்றும் இரண்டு துணை மருத்துவர்கள் உள்பட ஒரு மருத்துவ குழு அப்பெண்ணுடன் வந்துள்ளனர்.


இந்த ஜெட் விமானம் போர்ட்லேண்டிலிருந்து ஐஸ்லாந்தில் உள்ள ரெய்காவிக் விமான நிலையத்திற்கு செல்ல ஏழரை மணிநேரம் ஆனது. விமானம் அங்கு சற்று நேரம் நிறுத்தப்பட்டது.


அங்கு எரிபொருள் நிரப்பிய பிறகு, விமானம் துருக்கியின் இஸ்தான்புல்லில் தரையிறங்கியது. அங்கு விமானதத்திலிருந்த அனைத்து மருத்துவர்களும் விமானப் பணியாளர்களும் மாற்றப்பட்டனர். பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அமெரிக்காவுக்குச் சென்று விமான பயணம் முழுவதும் நோயாளியைக் கண்காணித்து வந்துள்ளார். 


அங்கே, பெண் இரண்டாவது தனியார் ஜெட் விமானத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர், இஸ்தான்புல்லில் இருந்து துருக்கியில் உள்ள டியார்பாகிர் விமான நிலையத்தை அடைவதற்கு நான்கு மணி நேரம் ஆனது. இதையடுத்து, சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜெட் தரையிறங்கியது. நோயாளி உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார்.


அமெரிக்காவில் சிகிச்சை காலம் அதிகமாக இருப்பதாகவும், நோயாளியை இந்தியாவுக்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதை விட அதிக செலவாகும் என்பதாலும் அந்த பெண் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதால், அமெரிக்காவில் உடல்நலக் காப்பீட்டைப் பெறுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


நோயாளி இந்திராநகரில் வசித்து வந்துள்ளார். போர்ட்லேண்டில் உள்ள லெகசி குட் சமாரிடன் மருத்துவ மையத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.