பெங்களூரு: "வேலைய விட்டு நிக்கிறது ஒரு கஷ்டம்னா, சம்பந்தமே இல்லாம வேலைய விட்டு தூக்கிட்டோம்னு மெயில் வர்றது அதைவிட பெரிய கொடுமைங்க.." இப்படியொரு விநோத சம்பவம்தான் இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
பொதுவாகவே ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் 'பணிநீக்கம்' (Layoff) என்ற வார்த்தையைக் கேட்டாலே ஊழியர்களுக்குத் தூக்கம் போய்விடும். இந்நிலையில், டிசம்பர் 2025-ல் ஒரு பெண்ணுக்கு வந்த 'லே-ஆஃப்' மெயில், அவரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர வைத்துள்ளது.
என்ன நடந்தது? -கணவனின் குமுறல்!
சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில் சைமன் இங்காரி (@Simon_Ingari) என்பவர் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், தனது மனைவிக்கு ஒரு பெரிய நிறுவனத்திடமிருந்து திடீரென 'பணிநீக்க மின்னஞ்சல்' (Termination Email) வந்ததைக் குறிப்பிட்டுள்ளார். அந்த மெயிலைப் பார்த்ததும், அவரது மனைவி ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய்விட்டாராம்.
"நாம ஏதாவது டெட்லைனை மிஸ் பண்ணிட்டோமா? இல்ல தெரியாம ஏதாவது பெரிய தப்பு பண்ணிட்டோமா?" எனப் பதறிப்போய் யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த 'ட்விஸ்ட்' தெரியவந்தது. உண்மையில், அந்தப் பெண் தற்போது அந்த நிறுவனத்தில் வேலையே செய்யவில்லை. பல நாட்களுக்கு முன்பே அந்த வேலையை விட்டு விலகிவிட்டார். ஆனால், அந்த நிறுவனத்தின் மனிதவளத் துறை (HR), பழைய டேட்டாக்களை வைத்துத் தவறுதலாக அவருக்கு இந்த மெயிலை அனுப்பியுள்ளது.
"கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்!" - எச்.ஆர்-க்கு அட்வைஸ்
தன் மனைவி அடைந்த மன உளைச்சலைக் கண்டு டென்ஷனான கணவர் சைமன், அந்த நிறுவனத்தின் எச்.ஆர் துறைக்கு ஒரு நக்கலான அட்வைஸையும் கொடுத்துள்ளார். "அன்புள்ள எச்.ஆர்-களே.. அடுத்த தடவை ஒரு மெயில் அனுப்பும்போது, யாருக்கு அனுப்புறோம்னு மெயில் ஐடியை கொஞ்சம் செக் பண்ணிட்டு அனுப்புங்க.. பாவம் மனுஷங்க!" எனப் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்களின் கமெண்ட்!
இந்த பதிவு பகிரப்பட்ட சில நாட்களிலேயே 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இதைப் பார்த்துள்ளனர். சுமார் 6,000 பேர் லைக் செய்துள்ளனர். இதைப் பார்த்த மக்கள் ஆளாளுக்கு ஒரு கமெண்ட் போட்டுத் தாக்கி வருகின்றனர்:
ஒரு யூசர்: "பரவாயில்லையே.. அந்தப் பொண்ணு லக்கி! உடனே அந்த கம்பெனிக்கு ரிப்ளை போட்டு, எனக்குத் தர வேண்டிய செட்டில்மென்ட் காசைக் கொடுங்கன்னு கேளுங்க!" என கலாய்த்துள்ளார்.
இன்னொருவர்: "நாம வேலை செய்யாத கம்பெனியில இருந்து இப்படி ஒரு மெயில் வர்றது நிஜமாவே ஒரு கெட்ட கனவு மாதிரி இருக்குங்க. எச்.ஆர்-களோட இந்த அஜாக்கிரதை ஒருத்தரோட மனநிம்மதியையே குலைச்சிரும்" என ஆதங்கப்பட்டுள்ளார்.
பணிநீக்கம் என்பது ஒரு தனிநபரின் கனவுகளைச் சிதைக்கும் விஷயம். டிஜிட்டல் உலகில் சிறிய தவறுகள் கூட பெரிய மன அழுத்தத்தை உருவாக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. நிறுவனங்கள் தங்களது தகவல்தொடர்புகளில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
