Metro QR Ticket : வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்டுகளை பெறுவதற்கான திட்டத்தை வாட்ஸ்அப் மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து நேற்று அறிவித்துள்ளது. இணையம் மூலம் வாடிக்கையாளர்களை தொடர் கொள்ளும் வசதி UPI பரிவர்த்தனையுடன் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் வாட்ஸ்அப்பிலேயே டிக்கெட்டுகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


'நம்ம மெட்ரோ' வாட்ஸ்அப் கணக்கு மூலம் வாடிக்கையாளர்கள், தங்கள் மெட்ரோ கணக்கில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ தரப்பில், "உலகிலேயே வாட்ஸ்அப் மூலம் க்யூஆர் டிக்கெட்டை பெறும் முதல் போக்குவரத்து வசதி இதுவாகும். 'நம்ம மெட்ரோ' பயணிகள் அனைவருக்கும் அதன் வாட்ஸ்அப் வசதி ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்த சேவையைப் பயன்படுத்த, பெங்களூரு மெட்ரோவின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 9181055 56677 க்கு ‘ஹாய்’ என்று பயணிகள் அனுப்ப வேண்டும். மேலும், மெட்ரோ பயணத்திற்கு ரீசார்ஜ் செய்வது மற்றும் வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துவதன் மூலம் ஒற்றை பயண டிக்கெட்டுகளை வாங்குவது போன்ற பல்வேறு விருப்பங்களை பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.


பணம் செலுத்தும் செயல்முறை ஒரு தடையற்ற அனுபவமாகும். இது, பயனர்களுக்கு, வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தை வழங்குகிறது. தங்கள் பயண விவரங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, பயனர்கள் தங்கள் UPI பின்னைப் பயன்படுத்தி பரிவர்த்தனையை அங்கீகரிப்பதன் மூலம் வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துவதற்கான விருப்பம் வழங்கப்படுகிறது.


இந்த வசதி பயனர் அனுபவத்தை எளிதாக்குகிறது. தொடர்பு கொள்ளத்தக்கது. மேலும், பயணிகள் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் பயணத்தின்போது தங்கள் போக்குவரத்தைத் திட்டமிடலாம் மற்றும் பணம் செலுத்தலாம்" என தெரிவித்துள்ளது.


சென்னையில் இப்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. ஆலந்துார் - சென்னை சென்ட்ரல், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்போது வரை மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதில் 23 கி.மீ. தூரம் சுரங்கத்திலும் மீதமுள்ள 22 கி.மீ. வழித்தடம் மேம்பாலம் வாயிலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


சென்னையில் 2-வது கட்டமாக 118.9 கி.மீ நீளத்தில் 3 வழித்தடங்களுடன் ரூ.61,843 கோடி செலவில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


அதன்படி, மாதவரம் - சிப்காட் வரை 48. கி.மீ நீளம் அமையவுள்ள தடத்தில் 30 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 50 மெட்ரோ ரயில் நிலையங்களும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ நீளத்தில் அமையவுள்ள தடத்தில் 18 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 30 மெட்ரோ ரயில் நிலையங்களும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையில் 47 கி.மீ நீளத்தில் அமைக்கவுள்ள தடத்தில் 42 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 48 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.