மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் மீண்டும் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து அஸ்ஸாம் நோக்கி சென்ற விரைவு ரயில் கட்டாக்கில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெங்களூருவில் இருந்து அஸ்ஸாம் நோக்கி சென்ற விரைவு ரயில் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரைன் தடம் புரண்டதால் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தொடர் கதையாகும் ரயில் விபத்துகள்:
Just In




இந்தியாவில் ரயில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்தாண்டு, கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி, ஆந்திர பிரதேசம் விழியநகரத்தில் நடத்த ரயில் விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு 12 நாள்களுக்கு முன்புதான், பிகார் பக்சர் மாவட்டத்தில் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 4 பேரின் உயிரை காவு வாங்கியது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலம் கட்டாக்கில் மீண்டும் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து அஸ்ஸாம் நோக்கி சென்ற விரைவு ரயில் கட்டாக்கில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பயணிகளின் நிலை என்ன?
இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) அசோக் குமார் மிஸ்ரா கூறுகையில், "மங்குலி அருகே நிர்குண்டியில் காலை 11:54 மணிக்கு SMVT பெங்களூரு - காமாக்யா ஏசி எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகளும் தடம் புரண்டுள்ளது.
மீட்பு ரயில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் இடங்களுக்குச் செல்ல உதவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ரயில் பாதையை விரைவில் சரிசெய்வதே எங்கள் முன்னுரிமை. அதன்படி, மற்ற ரயில்கள் திருப்பி விடப்படும்" என்றார்.
இதுபற்றி ஒடிசா தீயணைப்பு சேவை இயக்குநர் ஜெனரல் சுதன்சு சாரங்கி கூறுகையில், "காயமடைந்த ஏழு பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 10 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.
மீட்புப் பணியில் ரயில்வேக்கு உதவியாக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.