பிபிசி அலுவலகத்தில் நடைபெற்ற சோதனைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், பிபிசி தரப்பில் ஒரு சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதலமைச்சரும், இந்தியப் பிரதமருமாகிய நரேந்திர மோடியை விமர்சித்து ஒரு ஆவணப்படத்தை ஒளிபரப்பிய சில வாரங்களுக்குப் பிறகு புது டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் பிபிசி அலுவலகத்தில் இந்த சோதனை நடந்துள்ளன.


ஆவணப்படம்:


 பிபிசி ஒரு அறிக்கையில், சோதனையின் போது அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாகவும், இந்த சூழல் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளது.  மேலும் இந்த ஆவணப்படம் இங்கிலாந்தில் மட்டுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது என்றாலும், இந்திய அரசாங்கம் மக்கள் இந்த ஆவணப்படத்தை பகிர்வதற்கு கண்டனம் தெரிவித்து, இது இந்தியாவிற்கு எதிரானது, குரோத பிரச்சாரம் தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்று காலனித்துவத்துடன் கூறியுள்ளது என பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் ஆவணப்படத்தை பார்க்க கூடியிருந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர். 


அஞ்சும் அரசு:


2002ல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையில் அப்போதைய முதலமைச்சர் பிரதமர் மோடியின் பங்கில் கவனம் செலுத்தி இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ”இந்த சோதனை பற்றி கருத்து தெரிவிக்கையில் விரக்தியில் மூழ்கிய மோடி அரசு விமர்சனங்களை கண்டு அஞ்சுகிறது” எனக் கூறினார்.  


"இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த ஜனநாயகமற்ற மற்றும் சர்வாதிகார அணுகுமுறை இனியும் தொடர முடியாது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். ஆனால் மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா பிபிசியை "உலகின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு" என்று விவரித்தார். "நீங்கள் விஷத்தை கக்காத வரையில், ஒவ்வொரு அமைப்புக்கும் வாய்ப்பளிக்கும் நாடு இந்தியா" என்றார். தேடுதல்கள் சட்டபூர்வமானவை என்றும், நேரத்துக்கும் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.


பத்திரிகையாளர்கள் கண்டனம்:


பத்திரிகை சுதந்திரத்தை எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா இந்த சோதனை மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளது.  மேலும் "அரசாங்கக் கொள்கைகள் அல்லது ஆளும் ஸ்தாபனத்தை விமர்சிக்கும் பத்திரிகை நிறுவனங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தும் ஒரு தொடர்ச்சியான போக்காக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல்,  "ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை மூடி மறைக்க பிபிசி நிறுவனத்தை சோதனை மூலம் மிரட்ட முயற்சிப்பதாகவும், வருமான வரித் துறையின் பரந்த அதிகாரங்கள் கருத்து வேறுபாடுகளை அமைதிப்படுத்த மீண்டும் மீண்டும் ஆயுதமாக்கப்படுகின்றன” கூறியுள்ளது.


இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட மறுநாள் குஜராத் கலவரம் தொடங்கியது, ஏரளமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு பிரதமர் மோடியின் நேரடி தொடர்பு உள்ளது என்று வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது. 2005 ஆம் ஆண்டில், மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கு பொறுப்பாகக் கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகளின் நுழைவைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.  மோடி நீண்ட காலமாக தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறார், மேலும் கலவரத்திற்கு மன்னிப்பும் கேட்கவில்லை.


உச்சநீதிமன்றத்தில் வழக்கு:


2013 இல், உச்ச நீதிமன்றக் குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது. இந்த ஆவணப்படம் "நன்கு ஆராயப்பட்டது" என்றும், "பரந்த அளவிலான மக்கள் கருத்துக்கள், சாட்சிகள் மற்றும் நிபுணர்கள் அணுகப்பட்டதாகவும், பாஜகவில் உள்ளவர்களின் பதில்கள் உட்பட பலவிதமான கருத்துக்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்" என்றும் பிபிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த ஆவணப்படத்திற்கு பதிலளிக்க இந்திய அரசுக்கு உரிமை வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பிபிசி கடந்த மாதம் தெரிவித்தது.