ஏபிஜி குழுமத்தின் முதன்மை நிறுவனமான ABG Shipyard Ltd என்ற கப்பல் கட்டும் நிறுவனம் ரூ.22,842 கோடி மதிப்பிலான பண மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. சிபிஐ-ன் வரலாற்றில் மிகப்பெரிய வங்கி நிதி மோசடி வழக்காக இது உள்ளது. 


ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் (ABGSL)நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரிஷி கமலேஷ் அகர்வால், முன்னாள் செயல் இயக்குனர் சந்தானம் முத்தசாமி, இயக்குனர்கள் அஷ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால்,ரவி விமல் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


இந்தியாவில், பாரத ஸ்டேட் உள்ளிட்ட 28 வங்கிகளிடம் இருந்தும், இதர உயர் மதிப்பு கடன்தாரர்களிடம் இருந்தும் ரூ.22,842 கோடியை கடனாக பெற்று ஏய்ப்பு செய்ததாக இவர்கள் மீது கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரத ஸ்டேட் வங்கி புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 12ம் தேதி வழக்குத் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதாக சிபிஐ தரப்பில் இருந்து முறையாக விளக்கம் கேட்கப்பட்ட்டது. இதனையடுத்து, 2020 ஆகஸ்ட் மாதத்தில், ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் மேலும் ஒரு புதிய வழக்கை கடன்தாரர்கள் புகார் அளித்துள்ளனர்.  


இந்த புகாரின் மீது நடவடிக்கையைத் தொடங்கிய சிபிஐ, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு தரவுகளை திரட்டியுள்ளது. இதனடிப்படையில், கடந்த 7ம் தேதி ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின்  மீதும், அதன் இயக்குனர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. 


எப்ஐஆர்-ல், " M/s. Ernst & Young LP நிதி மேலாண்மை நிறுவனம் வெளியட்ட  தடயவியல் சார்ந்த கணக்கீடு அறிக்கையில், 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 ஜூலை வரையிலான காலக்கட்டத்தில்  குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வங்கி நிதியை தவறாக பயன்படுத்துதல், முறைகேடாக வருமானம் ஈட்டுதல், விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், வங்கியிடம் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிரான நோக்கங்களுக்காக பணத்தை செலவு செய்துள்ளனர். வேறு திட்டங்களைக்கு பணத்தை கைமாற்றியுள்ளனர்" என்று  தெரிவித்துள்ளது.


முன்னதாக, அளித்த  அதிக மதிப்புகொண்ட வாராக்கடன் கணக்காக (Non- Performing assetts) ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தை வங்கிகள் அறிவித்தனர். இதனையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு நிதி மோசடி கணக்காக அறிவித்தது.  


இந்தியாவின், பொதுத்துறை வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன் தொகை (இந்திய ரிசர்வ் வங்கியின் சர்வதேச செயல்பாடுகளுக்கான தரவின்படி) 31.03.2015-ம் தேதியில் மதிப்பிடப்பட்ட 2,79,016 கோடி ரூபாயிலிருந்து 31.03.2018 தேதியில் 8,95,601 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. மேலும், 31.3.2018 அன்று வரை வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது 2323 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, 8835 வழக்குகள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளன 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண