மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்க கிரிக்கெட் ஜாம்பவான்களான கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட முக்கிய விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டனர். 


மேலும் இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, ரவிசந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரும் அழைக்கப்பட்டனர். இதுபோக, இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். சாய்னா நேவால், பி.வி.சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் ப்ல்லேலா கோபிசந்த், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, கால்பந்து வீராங்கனை கல்யாண் சௌபே, தடகள வீராங்கனை கவிதா ரவுத் துங்கர், பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வீராங்கனை தேவேந்திர ஜன்ஜாடியா ஆகியோருக்கும் விழாவுக்கு அழைப்பு வந்துள்ளது. 


இந்தநிலையில், அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அயோத்திக்கு சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் விராட் கோலியின் காரான ரேஞ்ச் ரோவர் அயோத்தி சென்றதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  






கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரும் அயோத்தி சென்றடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, அனில் கும்ப்ளே அயோத்தி விமான நிலையத்தில் காணப்பட்ட புகைப்படங்களும் வைரலானது. இவர்களை தொடர்ந்து, முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்தும் வந்துள்ளார். மேலும், மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர், மகேந்திர சிங் தோனி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் கும்பாபிஷேக விழாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 










இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் அயோத்தி சென்றடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம். பல வருடங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வை கொண்டாடுகிறோம். இப்போது நாம் ராம் லல்லாவைப் பார்க்கும் அந்தத் தருணத்திற்காகக் காத்திருக்கிறோம்.” என தெரிவித்தார். இதையடுத்து, அயோத்தியில் இவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.