தேசிய அளவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பரபரப்பை கிளப்பி வந்த அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 


அயோத்தி ராமர் கோயில்:


இதனை அடுத்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 16.5 அடி உயரமும் கொண்ட இந்த திருக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்பட பல்வேறு வசதிகள் பக்தர்களுக்காக செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் கட்டுமான பணிக்காக ரூ.1800 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. 


அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோயிலில் 70 ஆயிரம் பேர் வரை ஒரு நேரத்தில் தரிசனம் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி அன்று ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 


 கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.  இந்த பிரம்மாண்ட விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


அயோத்தி விமான நிலையம்:


அயோத்தி கோயிலை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி,  போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சர்வதே தரத்தில் விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. 


இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி நாளை (டிசம்பர் 30) திறந்து வைக்கிறார்.   ரூ.1450 கோடி செலவில் நவீன வசதிகளுடன் இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி பாரம்பிரியத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.


இந்த சர்வதே விமான நிலையத்தை பிரதமர் மோடி  நாளை திறந்து வைக்க உள்ள நிலையில், அந்த விமான நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, ’மகரிஷி வால்மிகி சர்வதே விமான நிலையம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


’மகரிஷி வால்மிகி’


வால்மிகி என்பது ராமாயணத்தை எழுதினார். வால்மிக எழுதிய ராமாயணம் தற்போது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்ந நிலையில், தான்  வால்மிகிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அவரது பெயர்  விமான நிலையத்திற்கு  வைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இந்த புதிய விமான நிலையம் நாளை திறக்கப்பட்டாலும், ஜனவரி 6ஆம் தேதி முதல் தான் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.  டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 முன்னதாக, மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இதற்கு ’அயோத்தி தாம்' என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.