அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜூன் கோனி ரபா, இவர்  உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் ஜூன் கோனி ரபாவிற்கு  திருமணத்திற்காக வரன் தேடி வந்துள்ளனர். திருமணம் வரம் பார்க்கும் மேட்ரிமோனியில் பதிவு செய்து இருந்தனர். ராணா போஹாட் என்பவர் மேட்ரிமோனி வழியாக ஜுன்மோனிக்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதாகவும் அவரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய ஜுன்மோனியும், ராணா போஹாட்டுடன் பேசி பழகிவந்துள்ளார். பிறகு இருவீட்டாரும் சேர்ந்து திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

 



இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த உடன் வருங்கால கணவருடன் காவல் உதவி ஆய்வாளர் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார்.  இதற்கிடையில் ஜுன்மோனிக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபர் திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபர் சரியானவர் இல்லை நீங்கள் விசாரித்துப் பாருங்கள் அவருடைய உண்மை முகம் தெரியும் என கூறியுள்ளனர். 

 



காவலர் என்பதால் உடனடியாக இதை விசாரித்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் என முடிவெடுத்தார். இதனால் அவரது வேலைபற்றி அவரிடம் கேட்டபோது ராணா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரின் சந்தேகம் இன்னும் அதிகரித்துள்ளது.இதையடுத்து அவருக்கு தெரியாமலே ராணா குறித்து ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி எனக் கூறி கொண்டு, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது.

 



மேலும் இதுபோன்று மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ராணா மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதற்கான முழு ஆதாரங்களைத் திரட்டி ஜுன்மோனி நேற்று தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர் என்றும் பாராமல் ராணா போஹாடை அதிரடியாகக் கைது செய்துள்ளார். பணமோசடியில் ஈடுபட்டவர் வருங்கால கணவர் என்றும் பாராமல் கைது செய்த உதவி காவல் ஆய்வாளர் ஜுன்மோனி ரபாவுக்கு காவல்துறையின் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.