கட்சிக்கு துரோகமா? அசோக் கெலாட்டுக்கு எதிராக நடவடிக்கை...தலைவர் தேர்தலில் களமிறக்கப்படும் புதிய வேட்பாளர்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு நடுவில் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய அசோக் கெலாட் மீது காங்கிரஸ் தலைமை கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதியின் காரணமாக முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். 

Continues below advertisement

ராகுல் காந்தியின் வலியுறுத்தல்படி, காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கெலாட் ஒப்புகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி தொடர் இழுபறியை ஏற்படுத்தியது. இதற்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் தலைமையில் ராஜஸ்தானில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவிருந்தது. அதிகார மாற்றம் குறித்த அறிவிப்பு கெலாட் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவிக்கப்படவிருந்தது.

ஆனால், கெலாட் ஆதரவாளர்கள், அக்கூட்டத்திற்கு செல்லவில்லை. 20 முதல் 25 எம்எல்ஏக்கள் மட்டுமே கெலாட்டின் வீட்டிற்கு சென்றனர். பெரும்பாலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கெலாட்டுக்கு நெருக்கமான அமைச்சரான சாந்தி தாரிவாலின் வீட்டில் நடந்த வேறொரு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்திற்குப் பிறகு, அவர்கள் சிறப்புப் பேருந்தில் சபாநாயகரின் வீட்டிற்குச் சென்று, கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டை முதலமைச்சராக மாற்றினால் ராஜினாமா செய்வோம் என்று மிரட்டினர்.

தலைவராக கெலாட் தேர்வு செய்யப்பட்டால், அவரின் ஆதரவாளர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி செல்ல வேண்டும் என அவர் விரும்பியதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் மேலிடம், இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு முதலமைச்சர் பதவியை அளிக்க திட்டமிட்டிருந்தனர். முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டுக்கு அளித்தால் ராஜினாமா செய்து விடுவோம் என கெலாட்டுக்கு ஆதரவாக உள்ள 90 எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்தனர். இதற்கு பின்னணியில் கெலாட் இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியானது.

ராாகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு நடுவில் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய அசோக் கெலாட் மீது காங்கிரஸ் தலைமை கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கெலாட், முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்தது தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கெலாட்டுக்கு நெருக்கமான மூன்று அமைச்சர்கள் கட்சியின் உத்தரவுக்கு எதிராக திரண்டிருந்த போதிலும், தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார். "என் கையில் எதுவும் இல்லை. எம்எல்ஏக்கள் கோபத்தில் உள்ளனர்" என கார்கே, அஜய் மக்கானிடம் கெலாட் தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன் கார்கே, திக்விஜய சிங் போன்ற மூத்த தலைவர்களை தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது. மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் பெயரும் வந்துள்ளது. ஆனால், அவர் நேற்று மாலை சோனியா காந்தியை சந்தித்து தனது மாநிலத்தில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola