போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் நிரபராதி என Narcotics Control Bureau தெரிவித்துள்ளது. வழக்கின் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஆர்யன்கான் நிரபராதி என விடுவிக்க முக்கிய காரணம் என்ன? 


போதைப்பொருள்..


பிரபல பாலிவுட் நடிகர்  ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும், அவரின் நண்பர்களும் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். ஆர்யன் கான் ஒரு மாதம் சிறையில் இருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை Narcotics Control Bureau விசாரித்து வந்தது. இந்நிலையில், ஆர்யன் கானனை  நிரபராதி என்று அவரின் பெயரை சார்ஜ் சீட்டில் இருந்து நீக்கியுள்ளது. தேசிய போதைப்பொருள் தடுப்புப் அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆர்யன் கான் குற்றாவாளி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 




விசாரணை..


போதைப்பொருள் வழக்கில் பிரபலத்தின் மகன் என்றதுமே இந்த வழக்கை இந்தியாவே கவனித்தது. தீவிரமாக விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 6000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஷாருக்கான் மகனின் பெயர் இடம்பெறவில்லை. 


என்ன காரணம்? 



  • சொகுசுக்கப்பலில் சோதனை நடந்தபோது அது வீடியோபதிவாக எடுக்கப்படவில்லை. 

  • போதைப்பொருள் வழக்கில் ஆர்யன்கான் சேர்க்கப்பட்டாலும் சோதனையின் போது அவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை என்பதையே தொடக்கம் முதல் ஆர்யன்கான் தரப்பு கூறி வந்தது.

  • போதைப்பொருளை ஆர்யன்கான் எடுத்துக்கொண்டிருந்தாரா என்பதை நிரூபிக்கும் வகையில் அவரிடம் மருத்துவ பரிசோதனை எதுவுமே செய்யப்படவும் இல்லை.





  • ஆர்யன்கானின் செல்போன் பறிக்கப்பட்டு வாட்ஸ் அப் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போதும், அதனை மட்டுமே அடிப்படையாக கொண்ட குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதனை முழுமையாக ஏற்க arcotics Control Bureau யோசித்தது.

  • ஆர்யன்கானுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள். பின்னர் பிறழ் சாட்சியாக மாறினர். சோதனை நடந்தபோது அந்த இடத்தில் இல்லாதவர்களே சாட்சியாக வந்ததாகக் கூறியதால் ஆர்யன்கான் பக்கம் சாதகமாக வழக்கு சென்றது.


மர்மம்தான்..


ஆர்யன்கான் போதைப் பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர் என்றும், பயன்படுத்துவது மட்டுமின்றி, அதனை சப்ளை செய்வதும்கூட அவரது வேலையாக இருப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் இந்த வழக்கின் தொடக்கத்தில் தெரிவித்தனர்.


பின்னர் விசாரணையின் தொடக்கத்திலேயே முறைகேடுகள் நடப்பதாகவும், ஆர்யன்கானிடம் பேரம் பேசப்படுவதாகவும் தகவல் பரவி பரபரப்பை உண்டாக்கியது.இந்நிலையில் வழக்கு விசாரணை, ஆர்யன்கானுக்கு ஜாமின் என கடந்து தற்போது அவர் நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார்.