உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் வாரணாசி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு:


இந்து பெண்ககளின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக, இந்து பெண்களின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி (ஏஐஎம்) கமிட்டி மற்றும் உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த மனுவையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 


இதற்கிடையே, ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இருந்த போதிலும், ஆய்வின்போது மசூதி வளாகத்திற்கு சேதம் ஏற்படுத்தாத வகையிலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அதே சமயத்தில், மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.


அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய இந்திய தொல்லியல் துறை:


கோயிலின் மீது மசூதி கட்டப்பட்டதா என்பதை ஆய்வு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வு நிறைவு பெற்ற நிலையில், இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தொல்லியல் துறை மேலும் 15 நாள்கள் கால அவகாசம் கேட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை, இந்த அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டும்.


ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மசூதி தரப்பு மூத்த வழக்கிறிஞர் உசேஃபா அகமாதி, "வரலாற்றைத் தோண்டும் செயலில் இந்திய தொல்லியில் துறை ஈடுபட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது. சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கு இடையூறாக இருக்கிறது.


வரலாற்றில் 500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை  தோண்டி எடுக்க முயற்சி செய்கிறது இந்திய தொல்லியல் துறை. கடந்த கால காயங்களை மீண்டும் திறக்க முயற்சிக்கிறது" என வாதிட்டார்.


வழிபாட்டு தலங்கள் சட்டம், 1991இன்படி, "கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று, வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்ததோ, அதன்படியே தொடர வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.