திருமணங்களின்போது சில வித்தியாசமான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதேசமயத்தில், திருமணங்களின்போது மாப்பிள்ளை வீட்டாருக்கும், மணமகள் வீட்டார் இடையே கருத்து மோதல் காரணமாக வாக்குவாதம் ஏற்படுவதும், சண்டை நடைபெறுவதும் பல இடங்களில் நடைபெறுவதுதான். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகள் மணமகனுக்கு மணமேடையிலே கன்னத்தில் பளார் என்று அறை விட்டுள்ளார்.


நிரஞ்சன் மகபத்ரா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் திருமணத்திற்காக அமைக்கப்பட்ட மணமேடையில் மணமகளும், மணமகனும் ஒருவருக்கு ஒருவர் அருகருகே அமர்ந்துள்ளனர். அப்போது மணமகள் தனது உறவினர் பெண் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.


திடீரென மணமகளின் முகம் முழுவதும் கோபத்தில் சிவக்கிறது. கோபத்தின் உச்சிக்கு சென்ற மணமகள் பளாரென மணமகன்  தோளில் ஒரு அடி கொடுக்கிறார். இதனால், புதுமாப்பிள்ளை உள்பட சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.




மணமகளின் கோபத்திற்கு காரணம், மணமகன் திருமண நேரத்தின்போது வாயில் புகையிலையை போட்டு மென்று கொண்டிருந்ததே ஆகும். இதைப் பார்த்ததால்தான் மணமகளுக்கு கோபம் தலைக்கேறி உள்ளது. இதனால்தான், அவர் மணமகனுக்கு அனைவரின் முன்பே அறை கொடுத்துள்ளார். பின்னர், மணமகனை எழுந்து சென்று அந்த புகையிலையை துப்பிவிட்டு வருமாறும் கூறியுள்ளார். மாப்பிள்ளையும் தான் போட்டிருந்த புகையிலையை எழுந்து நின்று துப்பிவிட்டார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் இதைப்பார்த்து சிரித்து விட்டனர். முன்னதாக, மாப்பிள்ளைக்கு ஆதரவாக பேசிய ஒருவரையும் மணமகள் கோபத்தில் தோளில் அறைந்துள்ளார்.


நிரஞ்சன் என்பவர் பதிவிட்ட இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், சிலர் இந்த வீடியோவிற்கு கீழே தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்விற்காக இதுபோன்று செய்துள்ளனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க : மைசூரு மாணவி பாலியல் வன்கொடுமை.. பிடிபட்ட தமிழ்நாடு குற்றவாளிகள்! - நடந்தது என்ன?