Budget 2026 Alcohol Price: மத்திய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து, ரூ.1000 மதிப்பிலான மதுபானத்தின் புதிய விலை என்னவாக இருக்கும்? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் மதுபானங்களின் விலை..

ஒவ்வொரு முறை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகும் பொதுமக்களிடையே, இரண்டு கேள்விகள் தவறாமல் எழும். எவற்றின் விலை குறையும்? எவற்றின் விலை அதிகரிக்கும்? என்பதே அவை. சிகரெட் மற்றும் மதுபானங்கள் ஆகியவை இந்த விவாதத்தில் பெரும்பாலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2026 பட்ஜெட்டும் அதற்கு எந்தவித விதிவிலக்கையும் பெறவில்லை. சிறிய வரி திருத்தங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானங்களின் விலை பல்வேறு மாநிலங்களிலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தினசரி மது அருந்துபவர்களுக்கு அவர்களது பட்ஜெட்டில் மிகப்பெரிய துண்டாக விழலாம். வாழும் நகரங்கள் அடிப்படையில், ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில் மீதான விலை உயர்வானது பெரியதாக இருக்கும்.

வரியை உயர்த்திய மத்திய அரசு

வழக்கமாக மதுபானங்களின் மீதான வரி என்பது மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் தான் வருகிறது. ஆனால், மத்திய பட்ஜெட் முடிவுகள் மறைமுக வரிகள் மற்றும் இணக்க செலவுகள் வாயிலாக சில்லறை விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எதிர்வரும் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், மதுபானக் கழிவுகள் மற்றும் கனிம விற்பனைக்கான மூலத்தில் வசூலிக்கப்படும் வரி (TCS) 1 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்ப ரீதியாகத் தோன்றினாலும், மாற்றங்கள் பெரும்பாலும் விநியோகச் சங்கிலியில் வீழ்ச்சியை ஏற்படுத்தி, இறுதியில் விற்பனை விலைகளை உயர்த்தும் என்றே துறைசார் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அதோடு, மாநில அரசுகளும் வருவாயை பெருக்க கலால் வரிகளை திருத்துவது என்பது, பட்ஜெட்டுக்குப் பிந்தைய பொதுவான நடவடிக்கையாகும். இது மதுபானங்களின் விலையை மேலும் உயர்த்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களின் விலை எவ்வளவு உயரும்?

புதிய வரி உயர்வு நடவடிக்கையால் தற்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானமானது, ஆயிரத்து 50 ரூபாய் முதல் ஆயிரத்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம். சில மாநிலங்களில் இந்த விலை மேலும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.  மதுபானங்கள் மீது வசூலிக்கப்படும் கலால் வரியானது, மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடுவதால், விலை நிர்ணயம் ஒரே மாதிரியாக இருக்காது என கூறப்படுகிறது. உயர்த்தப்பட்டுள்ள வரி காரணமாக எந்த மதுபானத்தின் விலை எவ்வளவு உயரலாம் என, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு கணக்கிடப்பட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

மதுபான வகைபட்ஜெட்டிற்கு முந்தைய விலை (ரூ.)பட்ஜெட்டிற்கு பிறகான விலை (ரூ.)வித்தியாசம் (ரூ.)
ப்ரீமியம் விஸ்கி (750 மிலி)10001,050-1,10050-100
ஸ்டேண்டர்ட் வோட்கா (750 மிலி)800840-88040-80
மிட்-ரேஞ்ச் ரம் (750 மிலி)600630-66030-60
பீர் (650 மிலி)150158-1658-15
வைன் (750 மிலி)700735-77035-70

எகிறிய போதை வஸ்துக்களின் விலை

ஏற்கனவே திருத்தப்பட்ட ஜிஎஸ்டி காரணமாக சிகரெட், புகையிலை மற்றும் பான் மசாலா போன்ற போதை வஸ்துகளின் விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் தற்போது மதுபானமும் இணைந்துள்ளது. புதிய பட்ஜெட் வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரும்போது, மதுபானங்களின் விலையும் உயரும். இந்தியாவில் வழக்கமாக மது அருந்துபவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பதால்,  இதன் தாக்கம் உடனடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பாட்டிலின் மீது கொண்டுவரப்படும் ஒரு சிறிய அளவிலான விலை உயர்வு கூட மாதாந்திர செலவுகளை கணிசமாக உயர்த்தக்கூடும்.

பழக்கம் குறையுமா? வருவாய் உயருமா?

விலையேற்றத்திற்கு பிறகும் விற்பனை பெரிய அளவில் குறையாவிட்டால், மதுபான விற்பனையிலிருந்து அரசாங்க வருவாய் அதிகளவில் உயர வாய்ப்புள்ளது  ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், 2026 பட்ஜெட் "பாவப் பொருட்கள்" என்று அழைக்கப்படும் மது, சிகரெட், குட்கா மற்றும் பான் மசலா போன்ற பொருட்களின் விலைப்பட்டியலை மொத்தமாக மாற்றி அமைத்துள்ளது. இதன் மூலம் போதைப்பழக்கங்களை கைவிட்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவார்களா? அல்லது விடாமல் அரசாங்கத்தின் வருவாயை பெருக்குவார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.