அமிர்தசரஸ் - துபாய் : ஒரே ஒரு பயணிக்காக பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!
அமிர்தசரஸ் நகரில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் தனி ஒரு ஆளாக பயணித்துள்ளார் எஸ்.பி. சிங் ஓபராய்.

பிரபல தொழிலதிபரான எஸ்.பி.சிங் ஓபராய் 10 ஆண்டுகளுக்கான விசா வைத்துள்ள நிலையில் தொழில் நிமித்தமாக அவர் அடிக்கடி துபாய் போன்ற பல நாடுகளுக்கு சென்று வதுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேறு யாரும் முன்பதிவு செய்யாத நிலையில் அமிர்தசரஸ் நகரில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் எஸ்.பி. சிங் ஓபராய் ஒரு மகாராஜாவை போல தனியாக பயணித்துள்ளார். மறக்கமுடியாத இந்த அனுபவத்தை கொடுத்ததற்கு ஐக்கிய அரபு நாடுகளின் அரசுக்கும் இந்திய அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் சக பயணிகள் இல்லாமல் தனியாக பயணித்தது சற்று போர் அடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஒரு பயணி தனி ஆளாக துபாய் சென்றது குறிப்பிடத்தக்கது. அந்த பயணிக்கு பணிப்பெண்கள் கைதட்டி வரவேற்பு தந்தனர். அதே சமயம் அந்த விமானத்தின் கேப்டன் அவ்விமானம் முழுவதும் அந்த நபருக்கு சுற்றிக்காட்டியதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 8 லட்சம் செலவில் 17 டன் எரிபொருள் கொண்ட அந்த விமானம் தனி ஒரு நபருக்காக மும்பையில் இருந்து துபாய்க்கு பறந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த விமானம் மீண்டும் துபாயில் இருந்து மும்பைக்கு சேவையை அளிக்கவிருந்த நிலையில் ஒரு பயணிக்காக மும்பையில் இருந்து துபாய்க்கு அவ்விமானம் இயக்கப்பட்டதாக எமிரேட்ஸ் நிறுவனம் அப்போது தெரிவித்தது. சில சமயங்களில் இதுபோன்ற செயல்பாடுகளை விமான சேவை நிறுவனங்கள் செய்வது வழக்கம். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெறுவது மிகவும் அரிது என்பதும் குறிப்பிடத்தக்கது.