கடனில் சிக்கி தவித்து வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து, ரூ. 18,000 கோடி ரூபாய்க்கு நடப்பாண்டு தொடக்கத்தில் டாடா குழுமம் கையகப்படுத்தியது. அதைதொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டன.


விஸ்தாரா உடன் இணையும் டாடா:


இதனிடையே,  டாடா குழுமம் விஸ்தாரா என்ற விமான சேவை நிறுவனத்தை 49% பங்குகளை வைத்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஏற்கெனவே நடத்தி வருகிறது. விஸ்தாராவின் 51 சதவீத பங்குகளை டாடா வைத்துள்ள நிலையில் மீதமுள்ள 49 சதவீத பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்துள்ளது. இதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்த அதனை விஸ்தாரா உடன் இணைக்க டாடா குழுமம் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது. அதன்படி 2024ஆம் ஆண்டுக்குள் விஸ்தாரா நிறுவனத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் இணைக்கப்படும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம் 218 விமானங்களுடன் நாட்டின் பெரிய சா்வதேச விமான நிறுவனம், இரண்டாவது பெரிய உள்நாட்டு விமான நிறுவனம் ஆகிய பெருமைகளை ஏா் இந்தியா பெறும் என்று டாடா குழுமம் தெரிவித்து இருந்தது.


500 விமானங்களை வாங்க டாடா திட்டம்:


இந்நிலையில் தான், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் புதியதாக 500 விமானங்களை வாங்க, போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம், டாடா குழுமம் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அவற்றில்  400 குறுகிய உடலமைப்பு கொண்ட ஜெட் விமானங்கள் மற்றும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட அகல உடலமைப்பு கொண்ட விமானங்களுடன் இந்த  ஆர்டர்களில், A350s, போயிங் 787s மற்றும் 777s ஆகிய விமானங்களும் அடங்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


ஏர் இந்தியா வரலாறு:


1932ம் ஆண்டு இந்தியாவில் டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. அதைதொடர்ந்து, 1953-ம் ஆண்டில் டாடா ஏர்லைன்சை கையகப்படுத்திய இந்திய அரசு அதற்கு ஏர் இந்தியா என்று பெயர் சூட்டி நடத்தி வந்தது. ஆனால், கடன் அதிகரித்ததன் காரணமாக பல ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க இந்திய அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தது. ஆனால், இழப்பை சந்தித்துவரும் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு சரியான ஆளை இந்திய அரசால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதற்கிடையே ஏர் இந்தியாவுக்கு ஏராளமான கடனும் சேர்ந்தது.


விமான எரிபொருள் விலை அதிகமாக இருப்பது, விமான நிலையப் பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாக இருப்பது, குறைந்த கட்டண விமான சேவைகளின் போட்டி, ரூபாய் மதிப்பு குறைவு, அதிகமான வட்டி விகிதம் ஆகியவையே இழப்புக்கான காரணம் என்று ஏர் இந்தியா கூறி வந்ததது. 2018-19 நிதியாண்டின் இறுதியில் ஏர் இந்தியாவின் கடன் உள்ளிட்ட பொறுப்புகள் ரூ.70,686.6 கோடியாக இருந்தது. பொதுத் துறை உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்சுடன் 2007ல் இணைக்கப்பட்டதில் இருந்து ஏர் இந்தியா லாபகரமாக இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.