இந்தியாவில் கடைசியாக உருவான மாநிலம் தெலங்கானா. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான தெலங்கானாவின் முதல் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போதிலிருந்து கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக கே.சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது.


தெலங்கானா:


தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர வேறு எங்கும் ஆட்சி அமைத்திராத பாஜக, தன்னுடைய அடுத்த குறியை தெலங்கானா மீது வைத்துள்ளது. அதேபோல, ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தது. கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம்தான்.


இதன் காரணமாக, தெலங்கானாவில் இழந்த செல்வாக்கை மீட்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இப்படியிருக்க, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில் சந்திரசேகர் ராவ், பல சமூக நல திட்டங்களை அறிவித்து வருகிறார்.


தெலங்கானா அரசியலை திருப்பிபோட்ட காங்கிரஸ்:


அதேபோல, வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தெலங்கானாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் பிரதமர் மோடியை களமிறக்கி தொண்டர்களை உற்சாகப்படுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது. இச்சூழலில், தெலங்கானா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.


இந்த நிலையில், ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, 38 முதல் 54 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, 49 முதல் 65 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தெலங்கானாவில் 5 முதல் 13 இடங்களில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள், 5 முதல் 9 இடங்களில் வெற்றி பெறும் கணிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முதலமைச்சர் யார்?


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 39.4 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெறும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல, பிஆர்எஸ் 40.5 சதவிகித வாக்குகளையும் பாஜக 14.3 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்போது, இந்த தேர்தலில், எந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள் என எழுப்பிய கேள்விக்கு வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


யார் முதலமைச்சராக வர வேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு கே.சி.ஆருக்கு ஆதரவாக 37 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி, முதலமைச்சராக வர வேண்டும் என 31.2 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.