குஜராத்தின் துவாரகா பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


அதேபோல் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளியாக பதிவாகியுள்ளது.






கடந்த வாரம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது. நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்திருந்தது. அதேபோல் மேகாலயா மாநிலத்தில் துரா என்ற நகரிலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானது.


இந்தியாவில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் என உலகின் பல பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் துருக்கி – சிரியாவில ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவரை உலகம் கண்டிராத மிக மோசமான நிலநடுக்கமாக பார்க்கப்பட்டது. பல ஆயிரம் மக்கள் இதில் உயிரிழந்தனர்.


இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். பசிபிக் ரிங் ஆப் ஃபயர் (ring of fire) பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. பசிபிக் படுகையைச் சுற்றியுள்ள நில அதிர்வு பகுதிகளை தான் பசிபிக் ரிங் ஆப் ஃபயர் என அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவுக்கு அடியில் உள்ள புவியோடு அடிக்கடி மோதுவதால் நிலநடுக்கும் ஏற்படுகிறது.


நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும்போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். லேசான நில அதிர்வுகள் ஏற்படும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும்.


பூமியின் பல பகுதிகளிலும், புவி அதிர்வுகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. எனினும் அந்த அதிர்வுகள் ஓரிடத்தில் மிகுதியானால், அதைப் பூகம்பம் என்பர். நமது பூமியின் லித்தோஸ்பெரிக் மேற்பரப்பு  டெக்டோனிக் தட்டை உருவாக்குகிறது. இந்த தட்டுகள் பெரிய, ஒழுங்கற்ற வடிவிலான திடமான பாறைகளாகும். அவை கண்டம் மற்றும் கடல்சார் லித்தோஸ்பியரால் ஆனவை. அதாவது, பூமியின் மேற்பரப்பு, மலைகளும், குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும், ஆறுகளும், கடல்களும் நிறைந்தது. கடினமான பாறைகள் காற்றாலும், ஆறுகளாலும் சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு மலையடிவாரங்களில் தட்டுகளாக படிகின்றன. இதே செயல்முறை ஆண்டுதோறும் நடப்பதால் டெக்டோனிக் தட்டுகள் ஒன்றன் மீது ஒன்றாகப் படிகின்றன.


இந்த டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகரும் போது அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக்கொள்ளும். விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது பூகம்பத்தை விளைவிக்கும். அத்தகைய எதிர்வினை அலைகளின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடுகிறது. இது இறுதியில் பூமியின் மேற்பரப்பான நிலப்பரப்பை  உலுக்குகிறது. இந்த பூகம்பம் சம அளவிலான ஒரே மூலத்தால் உருவாக்கப்பட்டு பூமிக்குள்ளேயே அல்லது அதன் மேற்பரப்பில் பரப்பப்படுவதால் அவை நில அதிர்வு அலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.


பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மத்தியத் தரைக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.