டெல்லி திகார் சிறையில் ரவுடி ஒருவர் குத்தியும், அடித்தும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து மெத்தனமாக இருந்ததாக 99 சிறை அதிகாரிகளை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


டிஜிபி அதிரடி உத்தரவு:


இது தொடர்பான உத்தரவை சிறைத்துறை டிஜிபி சஞ்சய் பெனிவால் பிறப்பித்துள்ளார். துணை காவல் கண்காணிக்காப்பாளர்கள். இணை கண்காணிப்பாளர்கள், தலைமை வார்டன்கள், ஒரு அதிகாரி என மொத்தம் 99 பேரை நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் இன்னும் சில பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிறைத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தில்லு தாஜ்பூரியா கொலை மேலிடத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனாலேயே இந்த அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது என்றார். திகார் சிறை என்பது கொடுங் குற்றவாளிகள், ஹை புரொபைல் குற்றவாளிகள் பலரும் உள்ள சிறை. இந்நிலையில் அங்கு காவலர்கள் முன்னிலையிலேயே நடந்த இந்தக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் திகார் சிறை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.


திகார் ஜெயிலில் நடந்த திக்திக் சம்பவம்..


ஜிதேந்திர கோகி என்ற ரவுடியை கொலை செய்ததற்காக ரவுடி தில்லு தாஜ்பூரியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மே 2ஆம் தேதி, தாஜ்பூரியை, சிறையில் இருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டே சிலர் கொலை செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.


இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எதிராளி குழு சேர்ந்து, தில்லு தாஜ்பூரியாவை கிட்டத்தட்ட 90 முறை கத்தியால் குத்தி கொலை செய்தது அதில் பதிவாகியது. இதையடுத்து, படுகாயம் அடைந்த அவரை, நான்கு காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து தூக்கி செல்வதும் பதிவாகியிருந்தது.


ஆனால், திடீரென, தில்லு தாஜ்பூரியாவை இரண்டு பேர் மீண்டும் தாக்க தொடங்கியுள்ளனர். தில்லு தாஜ்பூரியா தாக்கப்படுவதை தடுக்காமல் அந்த காவல்துறை அதிகாரிகள் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர். தில்லு தாஜ்பூரியாவின் உடலில் 100 இடங்களில் காயங்கள் இருந்தன. பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில்தான், அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்தது.


தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி:


சம்பவம் நடந்தபோது, தில்லு தாஜ்பூரியா அடைக்கப்பட்டிருந்த சிறையில் காவலுக்காக நின்று கொண்டிருந்தவர்கள் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவை சேர்ந்த ஏழு அதிகாரிகள் ஆவர். கொலை சம்பவம் நடந்தபோது, அதை அமைதியாக பார்த்து கொண்டிருந்த தமிழ்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள், தமிழ்நாட்டுக்கே அனுப்பப்பட உள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த ஏடிஜிபி எச்.எம். ஜெயராம் இன்று திகார் சிறைக்கு செல்கிறார்.


இந்த விவகாரத்தில், திகார் சிறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம், சிறை நிர்வாகம் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், சிறை கண்காணிப்பாளரை நேரில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.