கொரோனா தொற்று பரவல் தொழில் வாழ்க்கையில் ஏற்படுத்திய முக்கிய மாற்றங்களில் ஒன்று Work From Home. பொதுமுடக்கம்  காரணமாக சேவைத்துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதித்தன. வீட்டில் இருந்தே பணி செய்யும் நடைமுறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குடும்பத்தினருடன் இருக்கும் சூழலையும், அதே சமயத்தில் அலுவலக செலவுகளை குறைக்கும் லாபகரமான செயல்முறையாக இருப்பதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவதன் மூலம் செயல்திறன் குறைந்து வேலை சுணக்கம் அடைந்ததால் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும்  அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கி உள்ளன. இதற்காக பல்வேறு சலுகைகளையும் அந்நிறுவனங்கள் அளித்து வருகின்றன. 


தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம்  குறைந்த நிலையில்  ஊழியர்களை அலுவலகத்துக்கு நிறுவனங்கள் அழைக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றியதால் பெரும்பாலானோர் அலுவலகத்துக்குச் செல்ல விருப்பம் காட்டவில்லை. கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிளில் தொடங்கி பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்துக்கு திரும்ப அழைத்து வருகிறது. ஊழியர்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு பல்வேறு சலுகைகளையும் நிறுவனங்கள் வழங்குகிறது. இருப்பினும் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்ப்பதில் விருப்பம் காட்டவில்லை.




இதை பிரதிபலிக்கும் விதமாக மும்பையை தலைமை இடமாக கொண்டு கல்வி சார் பணிகளில் ஈடுபடுவரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான  WhiteHat Jr என்ற நிறுவனம் தங்களது ஊழியர்களை "ரிட்டர்ன் டூ ஆஃபிஸ்" (Return To Office) அதாவது அலுவலகத்துக்கு திரும்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது. மும்பை, குருகிராம், பெங்களூரு ஆகிய இடங்களில் WhiteHat Jr நிறுவனத்திற்கு அலுவலகங்கள் உள்ளது. கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியன்று ரிட்டர்ன் டூ ஆஃபீஸ் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஊழியர்களுக்கு அந்நிறுவனம் அனுப்பியது. அதில் ஒரு மாத காலத்திற்குள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் சுமார் 800 ஊழியர்கள் அலுவலகத்தில் வந்து பணியாற்ற முடியாது என்று கூறி ராஜினாமா செய்துள்ளனர்.


'ரிட்டர்ன் டு ஆஃபிஸ்' திட்டமானது நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் செலவுக் குறைப்பு நடவடிக்கையாக இது இருக்கலாம் என முன்னாள் ஊழியர் குறிப்பிட்டுள்ளார். நிறுவனத்தின் பெயருக்கு கலங்கம் விளைவிக்காமல் "ரிட்டரன் டூ ஆஃபிஸ்" என்ற திட்டத்தை செயல்படுத்தி பலரை ராஜினாமா செய்ய நிறுவனம் வழிவகை செய்ததாக கூறப்படுகிறது. சேல்ஸ், கோடிங், கணிதக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமாக்கள் தொடரும் என கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


ஊழியர்களுக்கு குழந்தைகள் உள்ளன. சிலருக்கு நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள் உள்ளார்கள், மற்றவர்களுக்கும் வேறு பொறுப்புகள் உள்ளது. இவ்வுளவு குறுகிய காலத்தில் அலுவலகத்திற்கு அழைப்பது என்பது சரியான முறையாக இருக்காது என அதில் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளாக சொந்த ஊரில் இருந்து வேலை பார்க்கும் போது ஊதியம் சரியாக இருந்திருக்கும் எனவும் திடீரென வேறு மாநிலங்களில் உள்ள அலுவலகத்துக்கு அழைக்கும் பட்சத்தில் நிறுவனங்கள் ஊழியர்களின் வாழ்க்கை செலவுக்கு ஏற்றபடி ஊதியத்தை திருத்த வேண்டும் என்ற எண்ணம் ஊழியர்களிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.