இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அடுத்த பிரச்னை தலைதூக்கியுள்ளது. Mucormycisis என்ற ஒரு வகை பூஞ்சை தொற்று ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது கொரோனா வைரசால் தூண்டப்படும் இந்த பூஞ்சை தொற்று பல்வேறு மாநிலங்களில் பாதிப்பை உண்டாக்குவது தெரியவந்துள்ளது. ஹரியானாவில் கடந்த 5 வாரத்தில் மட்டும் 27 பேர் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




இருவர் இறந்துவிட்ட நிலையில் மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர்,  பூஞ்சைத் தொற்று என சந்தேகிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளுக்கு வரும்போதெல்லாம், நோய்த்தொற்றைக் கண்டறிய ENT அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மூக்கில் எண்டோஸ்கோபி செய்கிறார்கள். அது பூஞ்சைத் தொற்று என உறுதிசெய்யப்பட்டதும், அறுவை சிகிச்சைகளை உள்ளடக்கிய சிகிச்சை உடனடியாகத் தொடங்குகிறது. தாமதித்தால் பூஞ்சை வேகமாக வளர்கிறது, அது மூளையை பாதித்து உயிருக்கு ஆபத்தாகும் என தெரிவித்தார்.


இதற்கிடையே பூஞ்சை தொற்று குறித்து  தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ராண்தீப் குலீரியா, Mucormycisis எனப்படும் பூஞ்சை தொற்று பல மாநிலங்களில் பரவியுள்ளது. இந்த பூஞ்சை தொற்று சர்க்கரை வியாதி உள்ளவர்களை அதிக அளவில் பாதிக்கும். மூக்கு, கண், மூளையை பாதிக்கும் இந்த தொற்று சில நேரத்தில் கண் பார்வையை இழக்க வைக்கவும் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.






 கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாள் படுக்கையிலேயே சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இந்த பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நோயாளிகளை எளிதில் கண்டுபிடித்து அவர்களை பூஞ்சை தொற்று பாதிக்கிறது. இது நுரையீரலை பாதிக்கிறது. அடிபட்ட காயங்கள், வெட்டுக்காயங்கள் மூலம் இந்த பூஞ்சை தொற்று உடலுக்குள் நுழைகிறது. மூக்கு அடைப்பு, கண்கள் அல்லது கன்னங்களில் வீக்கம் போன்றவை இந்த பூஞ்சை தொற்றில் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனை கவனிக்காமல் விட்டால் 15 நாட்களில் மூளையைத் தாக்கி இறப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரொனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு இதுபோல அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உடலில் உள்ள திசுக்களை பரிசோதித்து பூஞ்சை தொற்றுக்கு எதிரான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் 




கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை குறை வைக்கிறது இந்த பூஞ்சை தொற்று. குறிப்பாக கொரோனாவில் இருந்து  மீண்ட ஆனால் நீரிழிவு, சிறுநீரகம் அல்லது இதய செயலிழப்பு அல்லது புற்றுநோய் போன்ற பிற உடல்நிலை  பாதிப்பை கொண்டவர்களில் இந்த தொற்று பொதுவாகப் பாதிக்கிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இப்போது தான் லேசாக இந்தியாவில் குறைவதாக கூறப்பட்டது. இப்போது புதிய வடிவில் ஒரு அச்சுறுத்தல் வருகிறது. இது எங்கு முடியுமோ என்கிற அச்சம் மக்களிடத்தில் எழுந்துள்ளது.