2017-ஆம் ஆண்டில்  உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு  மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையில் 63 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்த டாக்டர் கஃபீல் கானை அம்மாநில அரசு பணியில் இருந்து விடுவித்தது.       






 


கோரக்பூர் மாவட்டம் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2017 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிசன் உருளைகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்துக்கு ரூபாய் 67 இலட்சம் பணம் நிலுவையில் இருந்ததாகவும், அதனால் அந்த நிறுவனம் உருளைகள் வழங்குவதை நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தத் தட்டுப்பாட்டின் காரணமாக உரிய மருத்துவ சிகிச்சையை குழந்தைகளுக்கு தர இயலாததால் இறப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. 




குழந்தைகளின் இறப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதை திட்டவட்டமாக மறுத்த அம்மாநில அரசு, மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்த கஃபீல் கான் மீது குற்றம் சாட்டியது. ஐபிசி பிரிவு 409, 308, 120B, 420, ஊழல் தடுப்பு சட்டம், மருத்துவக் கழக சட்டம் உள்ளிட்டவைகளின் வழக்குப் பதிவு செய்தது. மருத்துவப் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு ( office of Director (Medical Education) துறையில்  இணைக்கப்பட்டார்), சிறையிலும் அடைத்தது. 9 மாதங்கள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 


இந்நிலையில், 2019-ம் ஆண்டில் மாவட்ட அரசு மருத்துவமனையில் (Bahraich District) தொடர்ச்சியாக  மூளை அலற்சி காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்தனர். அந்தப் பகுதிக்கு உடனடியாக விரைந்து இவர் முகாம்களை அமைத்து சில உதவிகளை வழங்கினார். அப்போது, அங்குள்ள மருத்துவர்களுடன் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக இரண்டாவது முறையாக அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். 


இதற்கிடையே, கோராக்பூர் சம்பவம் குறித்து மாநில அரசால் அமைக்கப்பட்ட துறைரீதியான விசராணைக் குழு, டாக்டர் கஃபீல் கானுக்கும் குழந்தைகள் உயிரிழப்புக்கும் எந்தவித தொடர்பும்  இல்லை என்று தெரிவித்தது. இருப்பினும், 2016க்கு முந்தைய காலங்கள் வரை தனியார் மருத்துவமனைகளில் சேவையாற்றி வந்ததாக கூறியது. இது, மருத்துவ சேவை விதிமுறைகளை மீறிய செயலாகும் என்றும் குற்றம் சாட்டியது.       


இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு டாக்டர் டாக்டர் கஃபீல் கானை பணியில் இருந்து அம்மாநில அரசு விடுவித்தது.


Quarantine tips from Dr Kafeel Khan | வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் கொரோனா நோயாளிகள் கவனத்துக்கு..!


இதுகுறித்து, தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்த கஃபீல் கான், " ஆக்சிஜன் விநியோகத்துக்கு அரசு முறையாக பணம் செலுத்தாத காரணத்தினால் 63 குழந்தைகள் உயிரிழந்தனர்.  மருத்துவர்கள், பணியாளர்கள் என பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எட்டு பேரில், ஏழு பேர் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். குற்றங்கள் புரியவில்லை என விசாரணைக் குழு முடிவு வழங்கிய பின்னரும், நான் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். உண்மையான, குற்றவாளிகள் சுதந்திரமாக உள்ளனர். பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.