திறமையும் சமூக நீதியையும் நிலை நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோடன கோடி நன்றிகள் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.


அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின் இசைத்துறையில் அரசாட்சி செய்து வந்தார். அவர் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். 79 வயதாகும் இளையராஜாவை இந்திய அரசு 2010 ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அதன் பின் 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இளையராஜாவுக்கு சமூக வளையதலங்களில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர் என பல்வேறு தரப்பினர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


 








இதனை தொடர்ந்து இசைஞானி இளையராஜவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்ட நிலையில் அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் “இறைவனையே இசை என்ற பொருளில் ஏழிசையாய், இசைப் பயனாய் என்று பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இப்படிப்பட்ட இசையின் மூலம் உலக மக்களை கொள்ளை கொண்டவரும், தன் இசைத் திறமையால் தலைமுறை தாண்டி ரசிகர்களை கவர்ந்தவரும், பிரபல இசையமைப்பாளருமான “இசைஞானி” திரு.இளையராஜா அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு  இருக்கிறது என்ற செய்தி எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது.என்னுடைய சொந்த மாவட்டமான தேனியை சார்ந்தவர் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். திறமையும் சமூக நீதியையும் நிலை நாட்டிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது கோடன கோடி நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.