சமீப காலமாகவே, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.


ரேவா மாவட்டத்தில் 16 வயது சிறுவன் 58 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வாயை கட்டி கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.


ஹனுமானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கைலாஷ்புரி கிராமத்தில் ஜனவரி 30ஆம் தேதி இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.


பெண்ணின் வாயில் பிளாஸ்டிக் பை மற்றும் துணியை வைத்து அடைத்து, பாதிக்கப்பட்ட பெண் வசிக்கும் கட்டிடத்தின் கட்டுமானப் பகுதிக்கு இழுத்துச் சென்று, அரிவாளால் அவரது தலை மற்றும் பிற உடல் பாகங்களை தாக்கியதுடன், அந்தரங்க உறுப்புகளிலும் காயங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


இந்த கொடூர சம்பவத்தை விவரித்த காவல்துறை தரப்பு, "குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெண்ணின் மொபைல் போனை திருடியதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்காக, சிறுவன் பழிவாங்க முற்பட்டிருக்கிறான். 


இதுகுறித்து விரிவாக பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) விவேக் லால், "கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் 58 வயது பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பிப்ரவரி 1ஆம் தேதி தகவல் கிடைத்தது.


சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர், அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.


தகவலறிந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சிறுவனை போலீசார் சுற்றி வளைத்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி பார்ப்பதற்காக தங்களின் வீட்டிற்கு ஒரு சிறுவன் வருவான் என்றும் அவன் மீது சந்தேகம் இருப்பதாகவும் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


அப்போது, மொபைல் போனை திருடியதாக சிறுவன் மீது பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. திருட்டு குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவமானத்தின் காரணமாக சிறுவன் பழிவாங்க திட்டமிட்டிருக்கிறார்.


கடந்த ஜனவரி 30ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனும் கணவரும் வெளியூருக்கு சென்றுள்ளார்கள். ​​அந்த சமயத்தில், சிறுவன் அவரது வீட்டிற்குள் நுழைந்தார். கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பலவந்தப்படுத்தியுள்ளார். அவர் கத்த முயன்றபோது, ​​பாலிதீன் பை மற்றும் துணியை வாயில் வைத்து அடைத்துள்ளார்.


பின்னர் கயிறு மற்றும் கம்பியால் அவரது முகத்தில் பிளாஸ்டிக் பையைக் கட்டி, கட்டிடத்தின் கட்டுமானப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார். அவரை ஒரு கதவில் கட்டிவிட்டு, சிறுவன் அந்தப் பெண்ணை பலமுறை அடித்ததாகவும், மூச்சுத் திணறலுக்குப் பிறகு அவர் அசையாமல் இருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது" என்றார்.