ஊராட்சி ஒன்றிய ஆணையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டத் தீர்வையை ரத்து செய்யக்கோரி, திருவாரூர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் 72 மணிநேர உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று காலை தொடங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியை புறக்கனித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுலகங்களில் நடைபெற்ற தணிக்கையின்போது, வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் இரண்டு பேருக்கும், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஒருவருக்கும் தலா 2 லட்சம் தண்டத் தீர்வை விதிக்கப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 72 மணிநேர உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
மேலும் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பல மாதங்கள் கடந்தும் தடையின்மைச் சான்று வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டியும், 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி தோல்வி விபரங்களை தவறாக மாற்றி அறிவித்து மாவட்டத்தின் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக அரசு தொகுப்பு வீடுகள் கணக்கெடுக்கும் பணி 100 நாள் வேலை திட்ட பணி அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் உள்ளிட்ட பணிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர் உடனடியாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.