2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டின் அனைத்து நிலங்களுக்கும் 14 இலக்கத்தில் தனி அடையாள எண் (Unique Identification Number) விநியோகிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிஜிட்டல் இந்திய நிலப்பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம் 2008-இன் (Digital India land records modernization programme-2008) கீழ் நாட்டின் அனைத்து நிலங்களுக்கான ஆதார் வகையிலான தனி எண் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த 2019-ஆம் ஆண்டு அரசு அறிவித்திருந்தது.


இதன்படி நில உரிமையாளர் விவரம் தொடங்கி நிலத்துக்குச் செலுத்தப்படும் வரி விவரங்கள் வரை அரசு அந்தத் தனி அடையாள எண் வழியாக அறிந்துகொள்ளலாம். தற்போது பத்து மாநிலங்களில் செயல்பாட்டில் இருக்கும் இந்த நடைமுறை வருகின்ற 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் அமல்படுத்தப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.


இந்த நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மாவட்டம் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வரை செலவாகும். நிலப்பதிவு விவரங்களை வருவாய் நீதிமன்றங்களுடன் இணைப்பதற்கு ரூ.270 கோடி வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




நிலத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை (Latitude and Longitude coordinates) ஒருங்கிணையும் மையப்புள்ளி கொண்டு உருவாக்கப்படும் இந்த அடையாள எண் நிலமோசடிகள், குறிப்பாக புதுப்பிக்கப்படாத கிராமப்புற நிலவிவரங்களின் மீது நடைபெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக நடைமுறைக்கு வருகிறது.


இந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் நீதிமன்றத்தை நிலப்பதிவுகளுடன் இணைப்பது, ஒப்புதல் அடிப்படையில் ஆதார் எண்களை நிலப்பதிவுகளுடன் இணைப்பது உள்ளிட்டவையும் அடுத்தகட்டமாக செயல்படுத்தப்படும் எனவும்,மேலும் ஆதார் எண் இணைப்பதற்கு ஆகும் செலவு விவரங்களையும்  நிலைக்குழு தனது அறிக்கையில் விவரித்துள்ளது.


இதற்கான பட்ஜெட் செலவு எவ்வளவு?


இந்த நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மாவட்டம் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வரை செலவாகும். நிலப்பதிவு விவரங்களை வருவாய் நீதிமன்றங்களுடன் இணைப்பதற்கு ரூ.270 கோடி வரைசெலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வருங்காலத்தில் இந்த நிலப்பதிவு விவரங்களை வங்கிகளுடன் இணைப்பதற்கான திட்டங்களும் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன.  


இதன்வழியாக நிலங்களுக்கான வங்கிச் சேவைகளை மேம்படுத்தமுடியும். அதுமட்டுமின்றி விவசாயம், நிதிப் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பிற துறைகளின் செயல்பாட்டையும் எளிமைபடுத்தமுடியும் எனக் கூறப்படுகிறது.


ஆதார் எண் விவரங்கள் குறித்த நம்பகத்தன்மையே இன்னும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இதுபோன்ற நிலத்துக்கான தனி அடையாள எண் எத்தனை பாதுகாப்பானது என்று இந்தத் திட்டம் குறித்த குழப்பங்களும் நிலவி வருகின்றன.