ஓசூர் அருகே விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர் தருமபுரி நகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.


தருமபுரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு  மேலாக மை தருமபுரி என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த தன்னார்வ அமைப்பின் நிறுவனர் சதீஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் குழுவாக இணைந்து மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றவரை காப்பகத்தில் சேர்த்தல், தினமும் அரசு மருத்துவமனை முன்பு மதிய உணவு வழங்குதல், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களை பராமரித்தல் போன்ற பல்வேறு சேவைகளை பத்தாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் ஆதரவற்ற நிலையில், பலர் உயிரிழந்து,  சடலங்கள் அடக்கம் செய்யப்படாமல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இதனை காவல் துறையினர் உதவியுடன் ஆதரவற்ற நிலையில் கிடந்த சடலங்களை மை தருமபுரி இலவச ஊர்தி சேவை என்ற பெயரில் நல்லடக்கம் செய்து வருகின்றனர். மேலும் உடல்களை நல்லடக்கம் செய்து விட்டு உறவினர்கள் செய்யும் பாரம்பரிய சடங்குகளையும் செய்து வருகின்றனர். மேலும் தங்கள் அடக்கம் செய்த ஆதரவற்ற சடலங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தில் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்து திதி கொடுத்து வருகின்றனர்


இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சாலை விபத்தில் அடிபட்டு காயம் அடைந்துள்ளார். காவல் துறையினர் இவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவரைப் பற்றி விசாரித்ததில் இவருக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை என தெரியவந்தது.


இதனை அடுத்து ஓசூர் போக்குவரத்து காவல் துறையினர் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மை தருமபுரி இலவச அமரர் ஊதி சேவைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஓசூர் போக்குவரத்து சிறப்பு காவல் ஆய்வாளர் பரிமளா மற்றும் மை தருமபுரி அமைப்பினர் இணைந்து, ஆதரவற்றைக் கடந்த ஆண் சடலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தர்மபுரி நகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இதுவரை தருமபுரி மாவட்டம் முழுவதும் வயது மூப்பு, விபத்து உள்ளிட்டவைகளில் உயிரிழந்த முதியவர், குழந்தைகள் என 86 ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்து, உறவினர்கள் செய்யும் சடங்குகளை செய்துள்ளனர்.