காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் கிளை நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, நுகு உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.




தமிழகத்தை நோக்கி பாய்ந்து வரும் காவிரி நீர்


இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கபினியில் 80,000, கிருஷ்ணசாகர் அணையில் 1.70 இலட்சம் கன அடி என  இரண்டு அணைகளிலும் சேர்த்து வினாடிக்கு 2.50 லட்சம் கன அடி தண்ணீர், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. 


இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடியது. இதனால் ஒகேனக்கல் பகுதிகளில் பாறைகள், அருவிகள் தெரியாத அளவிற்கு தண்ணீரில் மூழ்கி வெள்ளைக் காடாய் காட்சியளித்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 இலட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


ஆனால் மீண்டும் கேரளா, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்ததால், கேரள மாநிலம், வயநாட்டில் கன மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் கபினியில் மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் மற்றும் நுகு உள்ளிட்ட இருந்து,  தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது.


கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


இந்த நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று மாலை வினாடிக்கு 1.40 இலட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1.70 இலட்சம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 18-வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கம், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை நீட்டித்து வருகிறது. அதே போல் அதிகப்படியான வெள்ளம் வரும் என்பதால், காவேரி கரையோரப் பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு அறிவுறுத்தல்


மேலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் பகுதியில் அரசு பள்ளி, தனியார் மண்டபம் என பொதுமக்களுக்கான தங்குவதற்கு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கான நீர்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நேற்று திறக்கப்பட்ட 2.50 லட்சம் கன அடி தண்ணீரும் இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனால் காவிரியில் இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வரும் பட்சத்தில் காவிரி கரையோரம் உள்ள ஆலம்பாடி, ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் போன்ற பகுதிகளில் தங்கும் விடுதிகள், குடியிருப்புகளை தண்ணீர் சூழும் அபாயம் உள்ளது. அதேபோல் ஒகேனக்கல்- தேன்கனிக்கோட்டை பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி சாலை போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையில் இருந்து வருகிறது. 


இதனால் காவேரி கரையோரம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு, தீவிரமாக கண்காணித்து வருகிறது.