தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1132 பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் 53 363  மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த உணவு திட்டத்தை சிஎம்எஃப் எஸ் என்ற செல்போன் செயலி மூலம் தினசரி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் தொடங்கி வைத்தார்.


இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 1125 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 


தர்மபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாலக்கோடு வட்டாரத்தில் 11 ஆரம்ப பள்ளியில் பயிலும் 5,477 மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்தது.


இந்த நிலையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 51,237 மாணவ மாணவிகள் பயன்படுத்தினர். தமிழக முதல்வர் கடந்த 15ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் இதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 91 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.


 தர்மபுரி உள்ள அனைத்து வட்டாரங்கள் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1124 பள்ளிகளில் படிக்கும் 52 ஆயிரத்து 462 மாணவ, மாணவிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் 8 பள்ளிகளில் பயிலும் 901 மாணவ, மாணவிகள் என்று மொத்தம் ஆயிரத்து 132 பள்ளிகளில் படிக்கும் 53 ஆயிரத்து 363 மாணவ, மாணவிகள் திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர்.



 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியதாவது:-


முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்  திங்கட்கிழமை அன்று கோதுமை மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை ரவா காய்கறி சாம்பார், மற்றும்  புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி, வியாழ க்கிழமை வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடி மற்றும் காய்கறி சாம்பார் ஆகிய உணவுகள் சுவையாகவும், சுகாதாரமாகவும் சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து கல்வி கற்க வழி வகை செய்துள்ளது. அதனால் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்துள்ளது.


முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை கண்காணித்திடும் வகையில் மாவட்ட வட்டார அளவில் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்து வருகின்றனர். திட்டம் தொடர்பாக அவ்வப்போது தகவல்களை பரிமாறும் சிஎம்பிஎஸ் செல்போன் செயலி மூலம் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் செயல்பாடுகள் ஒவ்வொரு நகர்வுகளும் தினசரி முறையாக கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.