சர்வதேச அளவில் குத்து சண்டை போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் சிங்கப்பெண்...தந்தை இழந்தாலும் தன்னம்பிக்கையில் தாய்லாந்து நாட்டில் சர்வதேச அளவில் மீண்டும் முதல்பரிசை வென்ற மாணவி.

 

தருமபுரி மாவட்டம் தருமபுரி அருகே உள்ள வெள்ளோலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல வாணி (17). இந்த மாணவி கடந்த ஏழு ஆண்டுகளாக குத்து சண்டையில்  கடும் பயிற்சிகளை மேற்கொண்டு மாநில அளவில் தேசிய அளவில் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று இதுவரை 25க்கும் மேற்பட்ட வெற்றிகளை பெற்றுள்ளார்.

 

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் (குத்து சண்டை) போட்டியில் வெற்றி பெற்ற இந்த மாணவி சர்வதேச அளவில் போட்டியில் கலந்து கொள்வதற்கு நிதி வசதி இல்லாமல் தவித்து வந்த சூழலில், ஊடக வாயிலாக உதவி கோரினார். அந்தச் செய்தியைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த மாணவிக்கு நேபாளத்தில் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறுவதற்கு தங்கள் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் மூலமாக நிதி உதவி செய்தார்.



 

அந்தப் போட்டியில் கலந்து கொண்ட கோகுல வாணி சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பெற்றார். மேலும் தந்தையை 16 ஆண்டுகளுக்கு முன்பு இழந்திருந்தாலும் தாயின் அரவணைப்பில் படிப்படியாக படித்து தற்பொழுது சென்னையில் குயின் மேரிஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

 

மேலும் இந்த விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தால் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு பல்வேறு இடங்களில் உதவிகளைப் பெற்று பல போட்டிகளில் பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி தாய்லாந்து உலக குத்து சண்டை போட்டியில் (World champian ship) கிக் பாக்ஸிங் போட்டியில் 43 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு மூன்று சுற்றுகளில் விளையாடி இறுதியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சக வீராங்கனை உடன் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் கொடியை நிலைநாட்டி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை தர்மபுரி பேருந்து நிலையத்தில் அவரது தாயும் உறவினர்களும் நண்பர்களும் வரவேற்று கேக் வெட்டி கொண்டாடினர். 



 

மேலும் இதுகுறித்து தெரிவித்த கோகுல வாணி, “தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தாலும் போட்டிகளில் பங்கேற்பதற்கு பயண செலவிற்கு பற்றாக்குறையாக உள்ளது. அரசு சார்பிலும் தன்னார்வ அமைப்பினரோ தனக்கு நிதி உதவிகள் செய்தால் மேலும் நாட்டிற்காக பெருமை சேர்க்கும் வகையில் மேலும் பல நாடுகள் சர்வதேச அளவில் பங்கேற்று தேசத்திற்கு பெயர் வாங்கிக் கொடுப்பேன் . இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.