தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 239-வது முறையாக மனுதாக்கல் செய்தார்.

 

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் காலை தொடங்கியது. இதில் முதல் நபராக மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் தனது வேட்பு மனுவை  தேர்தல் நடத்தும் அலுவலர் கி.சாந்தியிடம் தாக்கல் செய்துள்ளார். நாடு முழுதும் எங்கு தேர்தல் நடந்தாலும், அதில் போட்டியிடுவதை வழக்கமாக வைத்துள்ள மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், இன்று, 239-வது முறையாக தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் மன்னன் பத்மராஜன்” என அறியப்படும் ஒரு சாதனையாளர். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் ஒரு ஓமியோபதி மருத்துவர். இவர் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு லிம்கா, புக் ஆஃப் ரிக்கார்டு போன்ற சாதனைப் புத்தகங்களில் மூன்று முறை சாதனையாளராக இடம் பெற்றிருக்கிறார்.



 

தோல்வியை மட்டுமே விரும்புகிறேன்


 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்மராஜன், “இதுவரை 239 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். தோல்வியை மட்டுமே விரும்புகிறேன். உலக சாதனை படைக்கும் நோக்கத்திற்காக தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். ஒரு தேர்தலில் அதிகபட்சமாக 6000 வாக்குகளை பெற்றுள்ளேன். இதுவரை வாஜ்பாய், அத்வானி, கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற பலரை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். இதுவரை துணை ஜனாதிபதிக்கு மூன்று முறை போட்டியிட்டு உள்ளேன். மேலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று இல்லை, தோல்வியை மட்டுமே விரும்புகிறேன். வெற்றி என்றால் அதை ஒருமுறை தான் அனுபவிக்க முடியும். தோல்வி என்பது தொடர்ந்து தாங்கிக் கொண்டே இருக்கலாம். 1988 முதல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை தேர்தல் வேட்பு மனுவிற்காக டெபாசிட் செய்துள்ளேன். நான் ஒரு சிறிய பஞ்சர் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். அதன் மூலம் கிடைக்கின்ற வருவாய் வைத்து இந்த டெபாசிட் தொகைகளை கட்டுகிறேன். ஜனாதிபதி தேர்தல், கூட்டுறவு தேர்தல், வார்டு உறுப்பினர் போன்ற எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். ஒரே ஒரு வார்டு தேர்தலில், ஒரு ஓட்டு கூட பெறவில்லை என தெரிவித்துள்ளார்.