காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி அணையில் வினாடிக்கு 60,000 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் வினாடிக்கு 650 கன அடியாகவும், கிளை நதியான நுகு அணையில் இருந்து 5000 கன அடி என மொத்தம் 65,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 


இதனால் காவிரி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, நேற்று காலை முதல் நீர்வரத்து  வினாடிக்கு 20000, 21,000 கன அடி என படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 33,000 கன அடியாக அதிகரித்ததுள்ளது.


மேலும் இந்த நீர் வரத்து அதிகரிப்பால் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக தண்ணீரின்றி வறண்டு கிடந்த ஒகேனக்கல்லில், பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை தண்ணீரில் மூழ்கி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்தருவி தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.


அதேபோல் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்று பக்கம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 56,500 கனடியில் இருந்து 65,500 கன அடியாக அதிகரித்து இருப்பதால், இந்த தண்ணீர் நாளை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும்.  


காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநில வயநாடு பகுதியில், இன்று அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதால், ஆரஞ் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது‌. 


மேலும் ஜூலை 21 வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.  


இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு, மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.