தமிழ் மாதத்தில் எந்த மாதத்திற்கும் இல்லாத பெருமை ஆடி மாதத்திற்கு உண்டு. புராணங்களில் யுத்த காலம் என்று ஆடி மாதத்தை குறிப்பிடுகின்றனர்.


இதனால் பிரச்சனைகள் அதிகரித்து வறட்சிக்கு இலக்காகும் என்று ஒரு ஐதீகம் உள்ளது. இதிலிருந்து  விடுபட ஆடி மாதம் முழுவதும் மக்களின் நாட்டம் ஆன்மீகத்தின் பக்கமே அதிக அளவில் இருக்கும்.


இதை அடிப்படையாகக் கொண்டே ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம் என்று பல்வேறு ஆன்மீக வழிபாடுகள் ஆடி மாதத்தில் நடக்கிறது.




இதே போல் பெரு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை உள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கு விழாக்கள் கலை கட்டும். கிராமங்களில் எப்பொழுதும் திறக்கப்படாத காவல் தெய்வங்களின் கோயில்களையும் திறந்து வழிபடும் மாதம் ஆடி ஆகும். 


மகாபாரத யுத்தம் நடந்த மாதம் ஆடி என்றும் போர் முடிந்து பாண்டவர்கள் ஆயுதங்களை ஆற்று நீரில் சுத்தப்படுத்திய நாளே ஆடிப்பெருக்கு என்றும் கொண்டாடப்படுகிறது. இதனால் பக்தி மயமான யுத்த காலம் என்றும் ஆடி மாதத்தை ஆன்மீக முன்னோடிகள் அழைக்கின்றனர். 


இந்த வகையில் பல்வேறு சிறப்புகளை தாங்கி நிற்கும் பெருமைக்குரிய ஆடி மாதம் இன்று 17ஆம் தேதி பிறக்கிறது. ஆடி முதல் நாளை தலையாடி என்று தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.


குறிப்பாக புதிதாக திருமண ஜோடிகளை பெற்றோர் தலை ஆடிக்கு அழைத்து விருந்து வைத்து மகிழ்கின்றனர். அதேபோல் மாலையில் அழிஞ்சு குச்சிகளில் தேங்காய்களை சொருகி தீயில் வேக வைத்து விநாயகரை வழிபடும் வைபவங்களும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. இது ஒரு புறம் இருக்க பஞ்சபூதங்கள் சார்ந்த அளப்பரிய நிகழ்வுகள் நடக்கும் அரிய மாதம் ஆடி என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 


 
தமிழ் மாதத்தில் சித்திரை தொடங்கி பங்குனி வரை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உள்ளது. இதில் நான்காம் மாதம்  ஆடியை ஆன்மீக மாதம் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். மற்ற மாதங்களை விட ஆடியில்தான் கிராமப்புற கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டும் இது மட்டும் இன்றி நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற ஐந்து நிலைகளிலும் மக்களை தொடரும் நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடக்கும். 


மனித வாழ்க்கை என்பது பஞ்சபூதங்களில் தொடங்கி அதில் நிறைவு பெறுகிறது. இதை நமக்கு உணர்த்தும் ஒரு அரிய அறிய மாதம் ஆடி என்று சொல்ல வேண்டும். இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளது. ஆடி மாதத்தில் நிலத்தை பொறுத்த வரை விவசாயிகள் ஆடி பட்டம் தேடி விதைக்கும் வழக்கம் உள்ளது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வுகளில் நீரில் நடக்கும். ஆடி காற்றில் அமிய பறக்கும் என்று சொல்லும் அளவிற்கு காற்று வீசும் மாதமும் ஆடி தான். அதே நேரத்தில் தூறல் வராதா என்று ஆகாயத்தை எதிர்பார்க்கும் நாட்களும் ஆடியில் தான் வந்து போகும்.


இவை அனைத்திற்கும் மேலாக அம்மனை வழிபட்டு நெருப்பு மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழாக்கள் ஆடி மாதத்தில் தான் அதிக அளவில் நடக்கும். இந்த வகையில் பஞ்சபூதங்களை மக்கள் சார்ந்து நிற்கும் பெருமைக்குரிய மாதம் ஆடி ஆகும்.


குறிப்பாக காவிரி கரையோரம் சார்ந்த மாவட்டங்களில் ஆடி மாத கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக இருக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆடியில் அரிய வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்த அறிய தமிழ் மாதத்தின் சிறப்புகளை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வதை கடமையாக கொள்ள வேண்டும்.