தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் கால்நடை சந்தைகள் நடைபெறுகிறது. இந்த வார சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும், கால்நடைகளை வாங்குவதற்கும், விற்கவும் வருகின்றனர். இந்த வார சந்தையில் வாரந்தோறும் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும். மேலும் தீபாவளி, பொங்கல், ஆடி, ரமலான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் 3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

 

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை விட்டுவிட்டு  பெய்து வந்ததால், கடந்த சில வாரங்களாக கால்நடைகள் வரத்து குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், இறைச்சிக்காக கால்நடைகளை வாங்க இன்றைய வார சந்தைக்கு ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். இதனால் இன்றைய வார சந்தையில் 1000க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மாடுகள் விலை அதிகரித்து விற்பனையானது. இன்றைய சந்தையில் 1000 க்கு மேற்பட்ட மாடுகள் சுமார் ரூ.50 இலட்சத்திற்கு விற்பனையானது.



 

இதேபோல் 1500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் ஆடுகள் சுமார் 4,000 முதல் 20,000 வரை விற்பனையானது. இன்றைய வார சந்தையில் ஆடுகள் மட்டும் ரூ.40 இலட்சம் அளவிற்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகை வருவதால் இறைச்சி பிரியர்கள் அதிக அளவில் வார சந்தைக்கு வந்திருந்தால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உள்ளிட்ட ரூ.1கோடிக்கு விற்பனையானது. மேலும் அடுத்த வாரம் வரும் சந்தை, பொங்கலுக்கு முந்தைய சந்தை என்பதால், விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

மேலும் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் பொங்கலுக்கு மாடுகளை அலங்கரிக்க கண்களை கவரும் வகையில், புதிய வகைகளில் வண்ண வண்ண நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், மூக்கனாக்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சிகள், கள்ள பூட்டு, வாயபட்டி, சாட்டை ஆகிய அலங்கார பொருட்களை வார சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 



 

மேலும் அடுத்த வாரம் வரும் சந்தை பொங்கலுக்கு முந்தைய  வாரச் சந்தை பொங்கலுக்கு முன் என்பதால், அலங்கார பொருட்கள் விற்பனை மற்றும் விலை அதிகரிக்கும் என்பதால், இந்த வாரமே சில விவசாயிகள் அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர்.  இந்த ஆண்டு மழை குறைந்ததால், கடந்த ஆண்டை விட, விற்பனை மற்றும் வருவாய் குறைவாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அடுத்த வாரம் விற்பனை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.