தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, அரூர், கொளகம்பட்டி, மங்கானேரி உள்ளிட்ட பகுதிகளில் 70 நாட்கள் பயிரான காய்கறி பயிர்கள் அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறைந்த நாட்களில் அதிக லாபம் என்பதால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் காலிபிளவர், முட்டைகோஸ், முள்ளங்கி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் காலிபிளவர் சாகுபடி தருமபுரி மாவட்டத்தில் அமோகமாக உள்ளது.



 

குறிப்பாக கடந்தாண்டு காலிபிளவர் அதிகளவில் சாகுபடி செய்ததால் விளைச்சல் அதிகரித்து விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் கடந்தாண்டு காலிபிளவர் சாகுபடியில் போதிய விலை இல்லாததால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு காலிபிளவர் குறைந்தளவில் விவசாயிகள் சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காலி பிளவர் விற்பனையாகவில்லை. இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் கவலையடைந்தனர். 

 

இந்நிலையில், காலிபிளவர் சீசன் தொடங்கியுள்ளதால், தருமபுரி மாவட்டத்தில், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, அரூர், கொளகம்பட்டி, மங்கானேரி உள்ளிட்ட பகுதியில் காலிபிளவர் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்போது அதிகப்படியான திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், அதிகமாக காலி பிளவர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காலிபிளவர் விலை தற்போது அதிகரித்து,  ரூ.20 முதல் ரூ.30-க்கும் விற்பனையாகிறது. மேலும் விவசாயிகளிடம் வாங்கி, வெளி மார்க்கெட்டில், ரூ. 40 முதல் 50 வரை விற்பனையாகிறது. இதனால் காலி பிளவர் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



 

மேலும் ஒரு ஏக்கர் பரப்பில் பயிர் செய்ய ரூ. 40 வரை செலவாகிறது. ஆனால் தற்போது 1 இலட்சம் வரை லாபம் கிடைத்துள்ளது. ஆனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.22-க்கு வாங்குகின்றனர். இதுவே தங்களுக்கே நல்ல விலை கிடைக்கிறது. ஆனால் எங்களிடம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒருமடங்கு இலாபம் எளிமையாக கிடைக்கிறது. இதனால் கூடுதலாக ரூ.5 சேர்த்து கொடுத்தால், நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஓசூர் போன்ற குளிர்  பிரதேசங்களில் வரக்கூடிய இந்த காலிபிளவர்,  வறட்சியாக இருக்கின்ற தருமபுரி மாவட்டங்களிலும் தற்பொழுது அதிகமாக விளைச்சல் அடைந்து வருகிறது. இதனால் முதல்முறையாக பயிரிட்ட காலிஃப்ளவர் சாகுபடியை விடாமல் தொடர்ந்து பயிரிடு போவதாகவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.