தருமபுரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த 40 நாட்களுக்கு மேலாக இருந்தது. தினந்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெப்பம் வீசி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் முழுவதுமாக வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாய பயிர்களை பாதுகாக்க போதிய தண்ணீர் இல்லாமல், காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிய அந்தனர். இந்நிலையில் கோடை மழை கை கொடுக்குமா என்று தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மழையை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பத்து நாட்களுக்கு மேலான நிலையிலும், கோடை மழை பொழியவில்லை. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும், குடிநீருக்கே வழியில்லாமல், தண்ணீர் தட்டுப்பாட்டால், தவித்து வந்தனர்.


இந்நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் அளவு வரலாறு காணாத அளவில் இருந்த நிலையில், இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் ஒரு வாரமாக கோடை மழை பொழியாமல் இருந்து வந்ததால், மழை நின்று விட்டதோ என்று எண்ணி, தர்மபுரி மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும், ஏமாற்றம் அடைந்தனர்.  இந்நிலையில் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர்,கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,  உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது அதேபோல் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட 22 மாவட்டங்களுக்கு அதீத கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலார்ட் கொடுத்து எச்சரிக்கை விடுத்து இருந்தது. 


இந்நிலையில் இன்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, மொரப்பூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், தீர்த்தமலை, சித்தேரி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும்  இடி, மின்னல், சூறைக்காற்று இல்லாமல், சுமார் 1 மணி  நேரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருவதால், விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று பெய்த இந்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளித்து வருகிறது. மேலும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் மழை நேரில் தவழ்ந்தவாறு செல்கின்றது.