தருமபுரி மாவட்டதை சேர்ந்த பணியில் உள்ள அனைத்து காவலர்களுக்கு ஒடசல்பட்டி வனப் பகுதியில் 10 நாட்கள் துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து நிலை காவலர்கள் பங்கேற்றனர்.

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி காவல் உட்கோட்டங்களில் உள்ள பகுதிகளில் காவல் துறையில் பணியாற்றும் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 1500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் தருமபுரி  மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் ஆண்டுக்கு ஒரு முறை துப்பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சி காவல் துறை சார்பில் நடத்தபட்டு வருகிறது.



 

அதனடிப்படையில் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கான துப்பாக்கி சூடும் நினைவூட்டல் பயிற்சி கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி தருமபுரி அடுத்த ஒடசல்பட்டி அருகே உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் செல்வமணி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இதில் தினந்தோறும் 100 முதல் 150 காவலர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி துப்பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சியை வழங்கி வருகிறார். இந்த பயிற்சியில் துப்பாக்கியை பிடிக்கின்ற விதம், சுடுவதற்கு தயாராவது, எவ்வாறு துப்பாக்கியை கையாள வேண்டும் என்பது குறித்த பயிற்சியை உதவி ஆய்வாளர் சின்னசாமி வழங்கி வருகிறார். அதே போல் எந்த வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது உள்ளிட்ட விவரங்களும் காவலர்களுக்கு நினைவூட்டல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவலர்களுக்கும் 3 சுற்றுகள் என 15 குண்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு 9 எம்எம் பிஸ்டல், காவலர்களுக்கு 303, 7.62 எம்எம் போர்டு ஆக்சன், இன்சாஸ் என மூன்று ரக துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. தொடர்ந்து இந்த நினைவூட்டல் பயிற்சி 10 நாட்கள் நடைபெருகிறது. இந்த 10 நாட்களுக்குள் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள், எந்த மாவட்டத்தில் பணியாற்றினாலும், ஒருநாளில் தங்களது நினைவூட்டல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



 

அதேபோல் இந்த நினைவூட்டல் பயிற்சியின்போது சிறப்பாக துப்பாக்கி சுடும் காவலர்களை, ஊக்கப்படுத்தும் விதத்தில், பயிற்சி கொடுத்து வரும் உதவி ஆய்வாளர் சின்னசாமி பாராட்டி ரொக்க பரிசு வழங்கி கௌவுரவபடுத்தினார். மேலும் இந்த துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சியில் காவல் துறையில் பணியாற்றும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் உதவி காவல் ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு நினைவூட்டல் பயிற்சியை எடுத்துக் கொள்கின்றனர்.