தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த தாசம்பட்டி, அரசு உயர் நிலைப் பள்ளி முன்பு, 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்துள்ளான்.


சடலமாக கிடந்த சிறுவன்


இதனை கண்ட கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து, பென்னாகரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பென்னாகரம் காவல் துறையினர், சிறுவனின் சடலத்தை ஆய்வு செய்தனர். அதில் கற்களோ அல்லது வேறு  ஏதேனும் பலமான ஆயுதம் கொண்டு தாக்கி, முகம் சிதைக்கப்பட்டு இருப்பதை தெரியவந்தது. மேலும் உடலில் வேறு எங்கேனீம் காயங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர்.


இதனையடுத்து சிறுவன் யார்? விவரம் என்னவென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மர்மமான முறையில் சடலமாக கிடந்த சிறுவன், பென்னாகரம் அருகே உள்ள பண்டஅள்ளி அடுத்த திப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாள் மற்றும் குமுதா ஆகிய தம்பதியினரின் மூத்த மகன் யாதவன் என தெரிய வந்தது.


மேலும், யாதவன் பண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். மேலும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, பெற்றோர் பெருமாள் குமுதா ஆகியோர் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, குமுதா கோபித்துக் கொண்டு, தனது தாய் வழி உறவினர் வீடான தாசம்பட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதில் இளைய மகன் வால்பாறையில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.


இந்நிலையில் தனது பாட்டி வீட்டில் இருந்த யாதவன், திப்பட்டிக்குச் சென்று தனது தந்தையை பார்த்து  விட்டு வருவதாக கூறி, நேற்று மாலை சென்றதாகவும், இன்று காலை தாசம்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளி அருகே மர்மமான முறையில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதனை தொடர்ந்து  சிறுவனை யாரோ அடித்து கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் மர்ம மரணம் குறித்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசீ மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் சிறுவனின் மர்ம மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து, சிறுவனை தந்தையே கொலை செய்தாரா? அல்லது வேறு யாராவது செய்திருப்பார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் தந்தையை பார்க்க செல்வதாக மாலையில் சென்ற சிறுவன், காலையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.