கர்நாடக அணிகளின் நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.20 இலட்சம் கன அடியாக நீர்வத்து அதிகரிப்பு-ஒகேனக்கல் பகுதி முழுவதும் அருவிகள், பாறைகள் தெரியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு. 

Continues below advertisement

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகின்ற தொடர் கன மழையால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராக சாகர் அணைகளுக்கு முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் ஹேமாவதி, ஹேரங்கி, நுகு உள்ளிட்ட அணைகள் நிரம்பி, உபரிநீர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி இருந்து வருகிறது.  இந்த நிலையில் காவிரி ஆற்றில் உபரிநீராக தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு கபினியில் 30,000 கன அடியாகவும், கிருஷ்ணராஜ சாகர் ஒரு லட்சம் கன அடி என வினாடிக்கு 1. 30 இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து கடந்த 15 நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று காலை வினாடித்கு 84,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக உயர்ந்து, இரவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்தது.

Continues below advertisement

இதனை தொடர்ந்து இன்று காலை மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1.20 இலட்சம்  கன அடியாக அதிகரித்துள்ளது.  இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஒகேனக்கல் பகுதியில் பாறைகள், அருவிகள் தண்ணீரில் மூழ்கி, வெள்ளை காடாய் காட்சியளித்து வருகிறது.

இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசில் இயக்கவும், பொதுமக்கள் குளிக்கும் மாவட்ட நிர்வாகம் 13-வது நாளாக தடை விதித்துள்ளது. 

மேலும் கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேலும் நீர்திறப்பு அதிகரிக்கும் என்பதால், ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு, மாவட்ட நிர்வாகம்  முற்றிலும் தடை விதித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள், பென்னாகரம் அடுத்த மடம் சோதனை சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

அதேபோல் காவிரி கரையோரம் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய், நாகமரை, பண்ணவாடி உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் இருக்கும், மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அதேப்போல் ஒகேனக்கல் பகுதியில் பொதுமக்களை தங்க வைக்க, அரசு பள்ளி, தனியார் மண்டபத்தில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் வருவாய், காவல், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.