கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்ட மேம்பாலத்தை கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக ஆட்சியில் பணிகள் தாமதமாக நடந்ததாகவும், பணிகள் முழுமையாக முடிவடையாமலேயே திறக்கப்பட்டு இருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை, உயர்மட்டப்பாலம் அமைக்கும் திட்டம் கடித எண்.23504/திட்டம்-1. 2010 ஆம் ஆண்டு கலைஞரால் கருத்துரு உருவாக்கப்பட்டது. பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் ஒப்பனக்கார வீதி சாலைகளில், அதிகப் போக்குவரத்துச் செறிவு(CPU) இருந்ததாலும், உக்கடம் பகுதியில், போக்குவரத்துச் நெரிசல் மிக அதிகமாக இருந்ததாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 14.11.2011 மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில், உயர்மட்டப்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


முந்தைய அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த மனம் இல்லாமல், ஏழு ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2.4.2018 அன்று பாலப்பணி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது. கோவை மாவட்டத்தில், மிகப்பெரிய அதிகார மையமாக செயல்பட்டு வந்த வேலுமணி அவர்கள், 7 ஆண்டுகாலம் கோவை மாவட்ட மக்களின் மீது எவ்வித அக்கறையும் காட்டவில்லை. 10 ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2018-2019 ஆம் நிதியாண்டில், 24.1.2021 அன்று, உயர்மட்டப் பாலத்தினை நீட்டித்து, மீண்டும் பணி துவங்க ஒப்பந்தம் போடப்பட்டது.7.5.2021 அன்று, திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் தலைமையில் கழக ஆட்சிப் பொறுப்பேற்றபோது. 12% சதவீத பாலப்பணிகள் மட்டுமே முடிந்து இருந்தன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இப்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னிடம் அறிவுறுத்தினார்கள்.




பணிகள் விரைவில் முடிவடையும்


முதலமைச்சர் அறிவுரையின்படி, பலமுறை கோயம்புத்தூர் தளத்திற்கே சென்று, ஆய்வுக் கூட்டங்களை நடத்தியதுடன், பொறியாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் எந்தெந்த வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கி செயல்படுத்தியுள்ளேன். என்னுடைய தொடர் நடவடிக்கையின் காரணமாக 88% சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டது. இப்பாலப்பணிக்கு சுமார் ரூ.318 கோடி நிதி திராவிட மாடல் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது. சாலையைப் பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுக்களின் கோரிக்கைகளை ஏற்று, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காலவிரயத்தைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சரால், 9.8.2024 அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.


இந்த உயர்மட்டப்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது குறித்து, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் படத்துடனும் பாராட்டியுள்ளதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வேலுமணி அவர்கள். உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை, பேட்டியாக அளித்துள்ளார். தினமலர் தமிழ்ப் பத்திரிகை ’நீட்டித்தது இ.பி.எஸ். நிறைவேற்றியது மு.க.ஸ்டாலின்’ எனப் பாராட்டி செய்தி உண்மையே. வெளியிட்டுள்ளது அனைவரும் அறிந்த ’காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்’ என்ற முது மொழிக்கேற்ப, கழக ஆட்சியால் பாலப் பணிகள் செய்யப்பட்டுள்தை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம். தற்போது, நடைபெற்று வரும் திருச்சி சாலை சுங்கம் பகுதியில், ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணி 31.8.2024க்குள் முடிக்கப்படும். இப்பணி விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்பதையும் வேலுமணிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.