விளம்பரம், சுயநலத்திற்காக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுபவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுமாதிரி நடக்கிறது என்பதால் பயங்காரவாத செயலில் ஈடுபட்டவர்களை விட்டுவிடக்கூடாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். 


இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாநகர பகுதிகளில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது. பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடு, கடைகள் ‌மீது தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை காவல் துறையினர் 2 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நடந்து இருப்பதால் 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டத்தில் எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து அறிக்கை அறிக்கை கொடுக்க உள்ளோம். 




கோவை மாவட்டம் பல்வேறு காலகட்டங்களில் பயங்காரவாத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இங்கு சிறு சிறு பிரச்சனையும் விளைவுகளை ஏற்படுத்தும். முதலமைச்சர் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் யார் செயல்பாட்டாலும் தயவுதட்சனம் பார்க்காமல் முதலமைச்சர் எடுக்க வேண்டும். அமைதியை குலைத்து விட்டு வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. கோவை பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு கெடுவதை முதலமைச்சர் அனுமதிக்க கூடாது. 




நாட்டின் ஒற்றுமை, முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் செயல்படுகிறார்கள். இச்செயல்களில் விளம்பரம், சுயநலத்திற்காக செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். இதுமாதிரி நடக்கிறது என்பதால் பயங்காரவாத செயலில் ஈடுபட்டவர்களை விட்டுவிடக்கூடாது.  அரசியல் காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்காமல் இருக்க கூடாது. நூற்றுக்கணக்கான இந்து அமைப்பினர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சமரசம் செய்து கொள்ளாமல் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை ஆதாரம் இருந்தும் கைது செய்ய ஏன் தாமதம்? இவ்வளவு சம்பவம் நடந்தும் 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு வேறு அரசியல் அழுத்தம் இருக்கிறதா? நாட்டிற்கு எதிராக‌ இருப்பவர்கள், சட்டம் ஒழுங்கு சீர் குலைக்க நினைப்பவர்கள் இச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண