ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் பூஜை செய்தார். மேலும் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான நம்ம எம்.எல்.ஏ. என்ற பெயரில் வாகனங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், ”கடந்த ஆண்டு கோவை கோடீஸ்வரன் கோவில் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் கார் சிலிண்டர் வெடிகுண்டு நிகழ்வு நடத்தினார். கார் வெடிகுண்டு குறித்து என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரம் பாதுகாப்பு அற்ற சூழலில் இருப்பதாக தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக தெரிவித்து வருகிறோம். கோவை மாநகரம் பாதுகாப்பிற்காக இன்று காலை கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தமிழகத்தில் சட்ட ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. புகார் அளித்தாலும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் மாநில அரசின் மீது இருக்கிறது. பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் ஏதேனும் சமூக வலைதளங்களும் கருத்து தெரிவித்தால், உடனடியாக காவல் துறை கைது செய்கிறார்கள். திமுகவினர் பிரதமர் மோடியை அவதூறாக பேசி வருகிறார்கள். அவர்கள் மீது புகார் அளித்தால் திமுகவினரை கைது செய்யாமல் பாஜகவிரை கைது செய்து வருகின்றனர். திமுகவினர் பாஜக தொண்டர்கள் கைது செய்வது, தாக்குவது குறித்து விசாரிக்க தேசிய தலைமை குழு அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பாஜகவினரிடம் விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்கப்படும்.




திமுக அரசு பயங்கரவாதம் செய்வார்களை விட்டுவிட்டு, அண்ணாமலை வீட்டில் அருகே இருந்த கொடி கம்பத்தை இரவோடு இரவாக அகற்றியது. கௌதமி மீது எனக்கு அதிகளவு அன்பு இருக்கிறது. தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்மணி. நான் கூட கௌதமியை தேசிய அளவில் வேலை செய்வதற்காக அழைக்கும் போது கௌதமி மாநில அளவிலே வேலை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். மாநில அளவிலான வேலைகள் இல்லாதல் கௌதமியை சரிவர பார்க்க முடியவில்லை. கடந்த மாதம் கூட கௌதமிடம் ஃபோனில் அழைத்து பேசினேன். நான் ஒரு நடிகை என்று நினைக்காமல் கட்சியின் அடிமட்ட தொண்டராக கட்சியின் பணியாற்றியவர். கௌதமி அளித்த கடிதம் மனவேதனை அளிக்கிறது. தன்னம்பிக்கையும், தைரியமிக்க பெண் கௌதமி. எந்த உதவியும் செய்வதற்கு தயாராக இருந்தது அவர் என்று விலகுவதாக கூறியது வருத்தம் அளிக்கிறது.


கட்சிக்காரர்களை சட்டத்துக்கு புறம்பாக யாரையும் பாதுகாக்க போவதில்லை. என்ன பிரச்சனை என்று முழுமையாக கூறியிருந்தால் அவருக்கு உதவி செய்ய எளிதாக இருந்திருக்கும். தனது பிரச்சனை தொடர்பாக ஒரு மாநில அரசிடம் புகார் கொடுத்தும், அவர் பா.ஜ.க.வில் இருந்த காரணத்தினால் புகார் எடுக்கவில்லை. இன்று கட்சியை விலகிய பிறகு புகாரை ஏற்றுக் கொண்டுள்ளனர். மீண்டும் கௌதமிக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன். அவர் கேட்டால் உதவி செய்து தருவேன். லியோ படம் பார்ப்பதற்கு நேரமில்லை. விடுமுறை நாட்கள் வாய்ப்பு இருந்தால் படத்தை பார்ப்பேன். சினிமா அரசியல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரித்து பார்க்க முடியாத ஒன்று. நல்ல பொழுதுபோக்கான படத்தை பார்ப்பதில் தப்பில்லை” எனத் தெரிவித்தார்.