பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


பெட்ரோல் குண்டுவீச்சு:


அதில், ”குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்னைக்கு வருகை தர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.  பெட்ரோல் வீசியதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல் துறையே தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் மேலும் நான்கு பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு:


கோவையில் குண்டு வைத்து அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளை, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய திமுக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்தச் சூழலில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்தால், அதனால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. பயங்கரவாதிகளை பயங்கரவாதிகளாகவே பார்க்க வேண்டும். அவர்களை விடுவித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் லாபக் கணக்கு பார்க்கக் கூடாது.


என்.ஐ.ஏ. விசாரணை


திமுக அரசின் செயல்பாடுகளை, அதன் இந்து விரோதப் போக்கை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால், பகிர்ந்தால் கூட வார இறுதி நாட்களில் நள்ளிரவில் வீடு புகந்து கைது செய்யவே தமிழ்நாடு காவல்துறைக்கு நேரம் போதவில்லை. ஆளுநர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீச துணிகிறார் என்றால், அது ஒரு தனி நபரின் முயற்சியாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு காவல் துறை தி.மு.க.வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


சென்னை ஆளுநர் மாளிகை வாசலில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரட்டி பிடித்தனர். குடியரசுத்தலைவர் சென்னை வரும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட வினோத் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையம் முதல் கிண்டி ஆளுநர் மாளிகை வரையும், பின் அங்கிருந்து இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் வரையும்  பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் ஆளுநர் மாளிகையில் தங்கி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.