தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. மேலும் இரவு நேரங்களில் கடும் குளிா் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. காந்திபுரம், பூமாா்க்கெட், ஆா்.எஸ்.புரம், வடவள்ளி, ராமநாதபுரம், அவிநாசி சாலை, சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தொடர்ந்து பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக பொள்ளாச்சி  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து தற்போது சுமார் ஒரு மணி நேரமாக கன மழை பெய்தது. தொடர் மழை பெய்து வருவதால் ஆழியார் அணை நிரம்பும் என சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


காட்டாற்று வெள்ளம்




திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருமூர்த்தி மலையில் காட்டாற்று  வெள்ளநீர் அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை சூழ்ந்து செல்வதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக காட்டாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை சூழ்ந்தது. வெள்ள நீரானது கோயில் வளாகம் முழுவதையும் சூழ்ந்து கொண்டு செல்கிறது. மேலும் கோவிலை ஒட்டி பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் பாதை முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு யாரும் செல்ல முடியாத அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவிலுக்கும் பஞ்சலிங்க அருவிக்கும் செல்ல பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.