கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இருவர் கைது

தியாகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த, அவரது காரில் எரிபொருள் ஊற்றி பற்ற வைக்கப்பட்டது. அதேபோல பாஜக பிரமுகர் பரத் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது.

Continues below advertisement

கோவை மாநகரப் பகுதிகளில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாநகரில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அனைத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 23 ம் தேதி மதியம் குனியமுத்தூர் பகுதியில் தியாகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த, அவரது காரில் எரிபொருள் ஊற்றி பற்ற வைக்கப்பட்டது. அதேபோல அதே நாள் இரவு 11 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களிலும்  இரு சமூகத்திற்கு இடையே பிளவு ஏற்படுத்துவது, வெடி மருந்து வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

Continues below advertisement

இந்த இரண்டு வழக்கிலும் தலா மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நுண்ணறிவு சேகரித்தும் சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வின் மூலம் புலன் விசாரணை செய்தோம். இதில் இன்று 4.30  மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ் (34), குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளாக உள்ளனர். இருவரும் இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள். இவர்களை குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் கைது செய்துள்ளார். இவர்கள் இன்று விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவர்.


கோவை நகரில் இதுபோல ஆறு வழக்குகளும், ஒரு பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கும் உள்ளது. மீதம் உள்ள வழக்குகளிலும் முன்னேற்றம் உள்ளது. மற்ற குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். மற்ற வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.  குற்றங்கள் நடக்காமல் இருக்க பல்வேறு படைப்பிரிவுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே பல்வேறு மதங்களைச் சார்ந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பேசி உள்ளோம். அனைவரும் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். கோவை மாநகரில் பதற்றம் ஏதுமில்லை அமைதியாக உள்ளது.

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, ஒப்பணக்கார வீதியில் நடந்த சம்பவம் தொடர்பான வழக்குகளில் மிகவும் முன்னேற்றம் உள்ளது. இந்த இரண்டு வழக்கின் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். அதேபோல மீதி வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொழுது தான் இந்த சம்பவங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதா என்பது தெரியவரும். பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக மனு அளித்துள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசிலணை செய்யப்பட்டு வருகிறது.  இரவில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.



கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சாய்பாபாகாலணி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola