தமிழ்நாட்டில் கோடை காலம் நிலவி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயில் நிலவி வந்தது. கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகமாகவே காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் வெயில் சற்று அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை நேரத்தில் கோவை மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. காந்திபுரம், ராமநாதபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், வெள்ளலூர், சுந்தராபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.


இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதேபோல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தாழ்வான இடங்களிலும், ரயில்வே சுரங்கப் பாதையிலும்,மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் மழை நீர் சூழ்ந்ததால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழை காரணமாக நல்லாம்பாளையம் முதல் கவுண்டம்பாளையம் செல்லும் ரயில்வே மேம்பால பகுதியில் ஒரு தனியார் மினி பேருந்து மழை நீரில் சிக்கியது. இதனால் அந்த பேருந்தில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தை மீட்டனர். இதேபோல மழை நீர் தேங்கிய இடங்களில் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.




கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலத்திற்கு 4 அடிக்கும் மேல் வெள்ள நீர் சென்றது. அப்போது அவ்வழியாக பணிக்குச் சென்று இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய வீரப்பனூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ள நீரில் சிக்கினார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் கயிற்றின் மூலம் இருசக்கர வாகனத்தை கட்டி, தண்ணீரில் சிக்கிகொண்ட நபரை வாகனத்துடன் மீட்டனர். இதனிடையே தரைப்பாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண