திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் வடிவேல் (40). இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு ரீமா சக்தி என்ற மகளும், நிஷாந்த் சக்தி என்ற மகனும் உள்ளனர். தனது மகன் மற்றும் மகளை முதல் வகுப்பில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்த்து வடிவேல் படிக்க வைத்து வருகிறார்.


ஈரோடு மாவட்டம் குமலன் குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த ரீமா சக்தி, பொதுத்தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்திருக்கிறார். அதேபள்ளியில் படித்த நிஷாந்த் சக்தி எட்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ஈரோட்டில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு நீதிபதி வடிவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நிஷாந்த் சக்தியை அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் நேற்று நீதிபதி வடிவேல் சேர்த்தார்.




நிஷாந்த் சக்தி 1 மற்றும் 2ம் வகுப்புகளை கோவை பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், 3 முதல் 5 -ம் வகுப்பு வரை திருச்சி மதுராபுரி அரசு நடுநிலைப்பள்ளியிலும், 6 முதல் 8 -ம் வகுப்பு வரை ஈரோடு, குமலன்குட்டை அரசு உயர் நிலைப் பள்ளியிலும் படித்துள்ளார். இதையடுத்து அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பிற்கு சேர்ந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக ஒரு நீதிபதி தனது மகனை அரசு பள்ளியிலேயே படிக்க வைத்து வருகிறார்.


இது குறித்து நீதிபதி வடிவேல் கூறுகையில், “ நான் அரசுப் பள்ளியில் படித்து, வழக்கறிஞர் பட்டம் பெற்றேன். பின்னர் அரசு உதவி வழக்கறிஞராக 2014 ம் ஆண்டு மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றேன். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வாயிலாக தேர்வு எழுதி நீதிபதியாக பணிபுரிகிறேன்.




அரசுப் பள்ளிகளில் சிறு குறைகள் இருக்கத் தான் செய்யும். அப்படி இருக்கும் போது தான் மாணவர்களிடையே தேடலும், ஆர்வமும் அதிகரிக்கும். நாட்டில் அரசு துறைகளில் பணிபுரியும் 60 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான். அரசு துறைகளில் பணி புரிபவர்கள், அவர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


மாவட்ட நீதிபதி தனது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து, மற்ற அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண