இருளர் பழங்குடியின பெண்ணின் நீதி போராட்டம் தான் ஜெய் பீம் திரைப்படம் கதை. தனது கணவர் காவல் துறை சித்ரவதையால் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக, உறுதியான தொடர் போராட்டத்தினால் வென்றதை திரைமொழியில் அப்படம் காட்சிப்படுத்தி இருந்தது. அதேபோல கல்லார் குடி காடர் பழங்குடிகள் உறுதியான தொடர் போராட்டத்தின் மூலம் வனத்திற்குள் தங்களது வாழ்விடத்தை உறுதி செய்யும் உரிமை போராட்டத்தில் வென்ற சம்பவம் நடந்துள்ளது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மலைத் தொடரை பூர்விகமாக கொண்டவர்கள், காடர் பழங்குடிகள். காடுகளை வாழ்வதாரமாக கொண்டு இயற்கையோடு இணைந்து காடர்கள் வாழ்ந்து வருகின்றனர். காடர்களின் குடியிருப்புகள் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் அடர் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன. வால்பாறை அருகே வனப்பகுதிக்குள் கல்லார்குடி பகுதியில் 23 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் மண் சரிவினால் குடியிருப்புகள் பெரும் சேதமடைந்தன. இதையடுத்து காடர் பழங்குடிகள் மண் சரிவு ஏற்படாத இடமாக கருதிய தெப்பக்குளமேடு என்ற வனப்பகுதியில் குடியிருப்புகளை அமைத்தனர்.




புலிகள் காப்பக உள் வட்ட பகுதி என்பதை காரணம் காட்டி, அப்பகுதியில் குடியிருக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த காடர் பழங்குடிகளை அப்புறப்படுத்திய வனத்துறையினர், அருகேயுள்ள தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் கட்டாயமாக தங்க வைத்தனர். பத்து நாட்களுக்குள் மாற்று ஏற்பாடு செய்து தருவதாக  வனத்துறையினர் கூறிய நிலையில், மாற்று இடம் தேர்வு செய்வதில் இழுபறி நிலவியது. காடுகளுக்கு வெளியே சில இடங்களை ஒதுக்கி தருவதாக வனத்துறையினர் கூறிய நிலையில், காடுகளில் இருந்து வெளியேற மாட்டோம் என காடர் பழங்குடிகள்  உறுதியாக இருந்தனர்.





வனத்துறையினர் தாங்கள் ஒதுக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டும், இல்லையெனில் ஏற்கனவே குடியிருந்த கல்லார் குடிக்கே திரும்ப செல்ல வேண்டுமென நிபந்தனை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காடர் பழங்குடிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் காடர் பழங்குடிகளுக்கு ஆதரவு கரம் நீட்டின. உண்ணாவிரதம், நடை பயணம் என தொடர்ந்து அறவழிப் போராட்டங்களில் காடர் பழங்குடிகள் ஈடுபட்டனர்.





இதனிடையே தெப்பக்குள மேட்டில் புதிதாக குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டுமென கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். கடந்தாண்டு கோவை மாவட்ட ஆட்சியராக ராசாமணி இருந்த போது, கல்லார் குடி காடர் பழங்குடிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயன்றார். இதன்படி வருவாய் துறை, வனத்துறை, நில அளவைத் துறை இணைந்து தெப்பக்குளமேடு பகுதியில் புதிய கிராமத்திற்கான நில அளவீடு செய்யப்பட்டது. இதையடுத்து ஓராண்டு கடந்த நிலையிலும், காடர் பழங்குடிகளுக்கு நிலம் வழங்கப்படவில்லை. அப்பகுதியில் குடியேறுவதற்கு வனத்துறையினர் பெரும் தடையாக இருந்து வந்தனர்.





இதனால் கடந்த மாதம் காடர் பழங்குடிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து அரசு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் தெப்பக்குள மேடு பகுதியில் புதிய கிராமம் அமைக்கவும், அவர்களுக்கு நிலம் ஒதுக்கவும் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி நேற்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தெப்பக்குள மேட்டில் 21 குடும்பங்களுக்கு ஒன்றரை செண்ட் வீதம் நிலத்திற்கான பட்டாக்களை வழங்கினார். இதனால் காடர் பழங்குடியினரின் 2 ஆண்டுகள் உரிமைப் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. தங்களது விருப்பப்படி புதிய கிராமம் அமைக்க பட்டா வழங்கியிருப்பது காடர் பழங்குடிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இது குறித்து பழங்குடியின செயற்பாட்டாளர் தன்ராஜ் கூறுகையில், “புலிகள் காப்பக பகுதியில் இருந்து பழங்குடியின மக்களை வெளியேற்ற வனத்துறை முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே புலிகள் காப்பக வனப்பகுதியில் பழங்குடிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. வன உரிமைச் சட்டம் 2006ன் படி இந்த பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளது.




காடர் பழங்குடிகளின் பிரச்சனைக்கு திமுக அரசு வேகமாக செயல்பட்டு ஒன்றரை மாதத்திற்குள் தீர்வு கண்டுள்ளது. இது காடர் பழங்குடியிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின மக்களின் தொடர் போராட்டம் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் இது சாத்தியமாகியுள்ளது. உள்ளூர் சமூக மக்களின் பங்களிப்பு இல்லாமல் காட்டினை பாதுகாக்க முடியாது. அதனை அரசு நிர்வாகமும், வனத்துறையும் புரிந்து கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.